Published On: Saturday, March 30, 2013
இந்தியாவில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினை: நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
இலங்கையில் முஸ்லிம்களை வேரறுக்க வேண்டும் எனும் நோக்கில் தொடர்ச்சியாக பள்ளிவாசல் உடைப்பு, ஹலால் முத்திரை நீக்குதல், முஸ்லிம்களின் கலாசார உரிமைகளை மறுக்கும் நோக்கில் ஹிஜாபை தடை செய்தல், பர்தா மற்றும் தொப்பி அணிந்துவரும் முஸ்லிம்களை அச்சுறுத்துதல் என சிங்களவர்களின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதைக் கண்டிப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயீல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையில் கொழும்பு, பெபிலியானாவில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான பெஷன் பக் நிறுவனத்திற்குள் நேற்றிரவு அத்துமீறி நுழைந்து பௌத்த பிக்குகளும், பாசிஷ வெறியர்களும் நிறுவனத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததோடு, அங்கிருந்த ஊழியர்களையும் தாறுமாறாக தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.
பௌத்த பிக்குகளால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதல் சம்பவங்கள் குறித்த நிறுவனத்தின் CCTV கமெராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனையறிந்த பொலிஸார், பெஷன் பக் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு CCTVஇல் பதிவான வீடியோ காட்சிகளை எந்தவொரு ஊடகத்திற்கும் வழங்க வேண்டாமெனவும், இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாமெனவும் அச்சுறுத்தியுள்ளதாகவும், பௌத்த பிக்குகள் மிகவும் கீழ்த்தரமான முறையில் ஊழியர்களைத் தாக்கும் காட்சிகளும் சேதம்விளைவிக்கும் காட்சிகளும் மிகவும் தெளிவாகவே பதிவாகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களை துடைத்தெறிய வேண்டும் எனும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு அநியாயங்களை செய்துவரும் பௌத்த பயங்கரவாதிகளையும், இன அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசாங்கத்தையும் வன்மையாக கண்டிப்பதோடு மத்திய அரசு உடனே தலையிட்டு முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது.
இதேவேளை நெல்லை ரயில் நிலையம் முன்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது என்று அந்த அமைப்பின் இணையத்தளம் அறிவித்துள்ளது.