Published On: Saturday, April 20, 2013
வாழைச்சேனையில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் 7 வயதுச் சிறுவன் மரணம்
வாழைச்சேனை கல்குடா சந்தியில் இன்று சனிக்கிழமை நண்பகல் வேளையில் இடம்பெற்ற விபத்தில் ஏழு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு கொம்மாதுறை, களுவன்கேணியிருந்து பாசிக்குடா நோக்கி சென்ற உழவு இயந்திரமொன்று கும்புறுமூலை பாசிக்குடா வீதியில் வைத்து குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணித்த 20 பேரில் சிறுவர் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் கொம்மாதுறை கலைவாணி வீதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் மிதுஷன் என்ற ஏழு வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். கல்குடா பொலிஸார் உழவு இயந்திரத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(குகதர்சன்)