Published On: Tuesday, May 14, 2013
மகாசேனனுக்காக மன்னிப்புக் கோரிய இலங்கை - அடுத்த புயலுக்குப் பெயர் பிரியா..!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயலுக்கு 'மகாசேனன்' என்று சூட்டிய பெயரை இலங்கை விலக்கிக் கொண்டுள்ளது. வங்கக் கடலில் உருவான புயலுக்கு 'மகாசேனன்' என்று பெயரிடப்பட்டது. அது தற்போது திருகோணமலையில் இருந்து 650 கி.மீ தொலைவில் உள்ளது.
இது மியான்மர் - பங்களாதேஷ் நோக்கி நகர்ந்து வருகிறது. எனினும் இதன் தாக்கம் இலங்கையிலும் காணப்படுகிறது. ஆங்காங்கே சிறியளவிலான சூறாவளி வீசி வருவதுடன் இடி மின்னலும் மழையும் கொட்டி வருகிறது.
இந்த நிலையில், இந்தப் புயலுக்கு இலங்கையை ஆட்சி செய்த மகாசேன மன்னனின் பெயர் சூட்டப்பட்டமைக்கு சிங்கள தேசியவாதிகள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து மகாசேன மன்னனின் பெயரை இந்தப் புயலுக்கு வைத்தமைக்காக வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் எச்.காரியவசம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்தப் பிராந்தியத்தில் உள்ள எட்டு நாடுகள் பெயரிடுவது வழக்கம். அகரவரிசைப்படி ஒவ்வொரு புயலுக்கும் அந்தந்த நாடுகள் அளித்த பட்டியலின் படி புயல்களுக்கு பெயரிடப்பட்டு வருகிறது.
2003இல் இளநகை இலங்கை சிபாரிசு செய்த மகாசேன மன்னனின் பெயர், தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயலுக்கு சூட்டப்பட்டுள்ளது. அனைத்துலகக் குழுவினால் இந்தப் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தப் பெயரை நீக்கும் படி இலங்கையினால் கோரப்பட்டுள்ளது.
எல்லாக்காலங்களிலும் புகழ் பெற்ற மன்னனான மகாசேனனின் பெயரை புயலுக்குச் சூட்டியது அவமானம் என்று மூத்த பேராசிரியர் ஜே.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மகாசேன என்ற பெயரை இந்தப் புயலுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று புதுடெல்லியில் உள்ள வளிமண்டலவியல் நிலையத்திற்கு இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும் இந்த முடிவுக்கு அமைச்சரின் தலையீடே காரணம் என்றும் கூறப்படுகிறது. இலங்கையின் இந்த முடிவினால், வங்கக் கடலில் தற்போது நிலைகொண்டுள்ள புயல் பெயரை இழந்துள்ளது.
அடுத்த புயலுக்கு பிரியா என்று பெயர் சூட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.