Published On: Tuesday, May 07, 2013
முஸ்லிம் முதலீட்டாளர்களை நடுத்தெருவில் கைவிட்ட உலமாசபை

சிலிங்கோ இலாப பங்கீட்டு இஸ்லாமிய வங்கியில் முதலிட்ட முஸ்லிம்களது 89 கோடி ருபா பணத்தினை மீளப் பெற்றுக் கொள்வது எவ்வாறு, இதற்காக யாரை நாடுவது மக்கள் ஏங்கித் தவிக்கின்றனர். இலங்கை மத்திய வங்கியில் பதியப்படாத ஒரு இஸ்லாமிய வங்கிக்கு ஷரிஆ சான்றிதழை ஜம்மியத்துல் உலமா எவ்வாறு வழங்கியது என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த ஞயிற்றுக்கிழமை சிலிங்கோ இலாப பங்கீட்டு முதலீட்டாளர்க்ள சங்கமொன்றை ஏற்படுத்தி நிர்வாக சபையொன்றை அமைத்து மாளிகாவத்தை அமைந்துள்ள இஸ்லாமிய நிலையத்தில் ஒன்று கூடினார்கள். இக்கூட்டத்திற்கு சிலிங்கோ கம்பனியின் உதவித் தலைவர் ஜயதிஸ்ஸ சமுகமளித்திருந்தார்.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் சங்கம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்திக்கு திறந்த மடல் ஒன்றை அனுப்பியுள்ளது. இக்கடிதத்தினை இச்சங்கத்தின் தலைவர் மும்தாஸ் ரஹ்மான், உதவிச் செயலாளர் எம்.எஸ்.ஏ.எச். மொஹிதீன் கையொப்பமிட்டுள்ளனர்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ரமழான் மாதத்தின் ஸஹர் வேளையில் வானொலியூடாக அ.இ.ஜ. உலமாவின் பல அங்கத்தவர்கள் சிலிங்கோ இ.ப.இ. பிரிவை ஆர்வமுட்டி பிரசாரம் செய்தார்கள் என்பது மிகவும் தெரிந்த விடயம்.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது மனைவி பெயரில் சிலிங்கோ இலாப பங்கீட்டு இஸ்லாமிய வங்கியில் இருந்து 140 மில்லியன் ருபா எடுத்துள்ளார். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவை இது பற்றி ஆலோசனைக்கு அழைத்து வரும்படி ஜம்மியத்துல் உலமாவிடம் பாதிக்கப்பட்ட சங்கம் வேண்டுகோள் விடுத்தாகவும் இச்சங்கம் தெரிவித்துள்ளது.
அவர் ஒரு மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதி என்பதால் அவர் பொது மக்களிடத்தில் பொறுப்புச் சொல்ல வேண்டியர். இப்பணத்தினை அவர் பெறும்போது அவர் விமான நிலையத்தின் தலைவராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை இன்னமும் மெளனமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
முதலீட்டாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுக்கு உதவுவதற்கும் இதுவரை உரிய முஸ்லிம் அமைச்சர்கள் பிரதியமைச்சர்களுக்கு அரசாங்கத்திற்கும் அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவும் முதலீட்டாளர்கள் தெரவிக்கின்றனர்.
அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சிலிங்கோ இலபா பங்கீட்டு இஸ்லாமிய வங்கிக்கு ஷரிஆ அனுமதி வழங்கி முஸ்லிம்கள் இந்த வங்கிக்கு தமது முதலீடுகளை வழங்கும்படி 27.01.2006ஆம் திகதி ஊடகங்களில் விளம்பரம் செய்திருந்தது.
இந்த வங்கியின் ஷரீஆ மார்க்க சட்ட ஆலோசனைசபை ஒன்றையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நியமித்திருந்தது. இலங்கை மத்திய வங்கியில் பதியப்படாத இந்த நிறுவனத்திற்கு எவ்வாறு இலங்கை ஜம்இயத்துல் உலமா அங்கீகாரம் வழங்கியது?
ஜம்மியத்துல் உலாமாவின் விளம்பரத்தை பார்த்து மாவனல்லை, பம்பலப்பிட்டி, சம்மாந்துறை, காத்தான்குடி, அக்கரைப்பற்று, பேருவளை, காலி, கம்பளை, அக்குரணை, புத்தளம் போன்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் தமது வீடுகளை விற்றும், மகளின் திருமணத்துக்காக வைத்திருந்த பணம், வெளிநாட்டில் உழைத்த பணம், நோய்வாய்பட்டு வியாபாரம் செய்ய முடியாமல் தனது வியாபர ஸ்தாபனத்தினை விற்று அல்லது 40, 30 வருடங்களாக சேவை செய்து தனது அரச தனியார் கம்பனிகளில் வேலைசெய்தவர்கள் தமது ஓய்வுபெற்ற ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். பணத்தினையே இந்த வங்கியில் 2006ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நாங்கள் முதலிட்டோம் என்று கூறப்பட்டுள்ளது.
(அஷ்ரப் ஏ. சமத்)