Published On: Wednesday, August 03, 2016
கேள்விக்குறியாகும் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம்
கடந்த சில வாரங்களுக்கு முன் அனைத்துப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் தமது 7 கோரிக்கைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு கோரி கடந்த மாதம் 13,14ஆம் திகதிகளில் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள். எனினும் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வுகள் கிட்டாத நிலையில் கடந்தமாதம் 27ஆம் திததி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இத்தொடர் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. மேலும் இவ்வேலை நிறுத்தத்ததால் நீர், மின்சாரம், விடுதி வசதி, விடுதி குளியலறை வசதிகள் போன்றனவும் தடைப்பட்டுள்ளன. இதனால் அனைவரும்; பல்கலைககழகம் மற்றும் விடுதிகளை விட்டும் வெளியேறியுள்ளார்கள்.
இது இவ்வாறிருக்க, இவ்வாறான பணி பகிஷ்கரிப்புக்களால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருந்தால் மாணவர்கள் தம் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது. மற்றும் இவர்களுடைய கல்வியாண்டு காலம் எவ்வாறு உரிய நேரத்தில் முடிவடையும்.
ஏற்கனவே 2012/2013, 2013/2014, 2014/2015 கல்வியாண்டு மாணவர்களை உயர்தர பரீட்சை சித்தியடைந்த காலத்தில் இருந்து சுமார் 2 வருட காலத்திற்கு பின்னர்தான் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கியுள்ளார்கள். தற்போதுள்ள கல்வித்திட்டத்தின் படி மாணவன் ஒருவன் உயர்தரப்பரீட்சை எழுதியதில் இருந்து 2 வருட காலம் பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்து.
பின்னர் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை பூர்த்திசெய்ய குறைந்தது 3 ஆண்டுகளுமாக மொத்தமாக ஆகக்குறைந்தது 5 வருட காலத்தினை செலவுசெய்ய வேண்டிய துர்பாக்கியமான சூழ்நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் இவ்வாறான வேலைநிறுத்த போராட்டங்கள் இடம்பெறுவதினால் இப்பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியாண்டு காலம் வரையறையின்றி கூடிச் செல்கிறது. இதனால் பாதிக்கப்படுவது மாணவர்களாகிய நாங்களே.
மேலும் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகங்களில் கடமையாற்றுபவர்கள் அனைவரும் மாணவர்களுக்காகவே என்று வாழையடிவாழையாக கூறப்பட்டு வந்தாலும் அது வெறும் சித்தாந்தமாக மாத்திரமே உள்ளது.
உண்மையில், நடைமுறையில் மாணவர்களின் தேவைகளுக்கு அப்பால் மற்றவர்களின் தேவைகளுக்காக வேண்டித்தான் அதிகமான நேரங்களில் பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன.
இது ஒருபுறமிருக்க இன்று எவ்வித கஷ்டங்களுமின்றி, பல்கலைக்கழக உள்வாரி மாணவர்கள் படும் கஷ்டங்களில் இருந்து அரைவாசி கஷ்டங்களைகூட பெறாமல் குறிப்பிட்ட 3 வருட காலத்திற்குள் பட்டப்படிப்பை முடித்துச் செல்லும் வெளிவாரி மாணவர்களுக்கு தானா இந்த கல்வித்திட்டம்?
க.பொ.த. உயர்தர பரீட்சையில் கூடிய இஸட் வெட்டுப்புள்ளிகள் பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி பல்வேறு கஷ்டங்கள், பகிடிவதை, வேலை நிறுத்தங்களுக்கு மத்தியில் அடிபட்டு பட்டப்படிப்பை பூர்த்திசெய்து தொழிற்சந்தைக்கு சென்றால் உள்வாரி பட்டதாரிகளுக்கும், வெளிவாரி பட்டதாரிகளுக்கும் சம பட்டம், சம கவனிப்பே. இது எந்தவகையில் நியாயம்? இதற்குத்தானா கஷ்டப்பட்டு படித்து, கூடிய இஸட் வெட்டுப் புள்ளிகளை பெற்று, விடுதியில் தங்கி, பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து அனைத்து விடயங்களையும் சகித்து, அனுசரித்து படித்து பட்டம் பெற்றது?
ஆசியாவின் ஆச்சரியமிக்க நாட்டின் கல்வித்திட்டம் இது தானா? இதற்கிடையில் வேலைநிறுத்தம் காரணமாக கல்வியாண்டு இன்னும் தள்ளிப் போகிறது.
எனவே இவ்வாறான செயற்பாடுகளால் கல்வியாண்டு காலங்களை அதிகரித்து மாணவர்ககளின் வாழ்க்கையை பாழாக்கி விடாதீர்கள். எனவே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மிக விரைவில் பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளே இது உங்கள் கவனத்திற்கு.
பி.எம். சக்ரி
2ஆம் வருடம்
அரசியல் விஞ்ஞானதுறை,
தென்கிழக்கு பல்கலைக்கழகம்