Published On: Friday, March 15, 2013
கபடமில்லாத அணிலாகிய நான்

ஒரு புலர் காலைப்பொழுதில்
என் வீட்டு கொய்யா மரக்கிளையில்
அணில் குஞ்சு போல அல்லது
கொய்யப் பழம் கொறிக்கும்
அழகான அணில் போலாயினும்
நானும் நீங்களும் எக்காலமும்
வாழ்ந்திடவும் தீர்மானிப்பதுண்டு
அயல் பறவையின் பசியுணர்ந்து
தான் புசித்த கொய்யாவில்
மீதம் வைத்து விட்டுப் போகிற
அணிலுக்கு முன்னால் மனிதம் தோற்று
வெகு நாளாயிற்று
எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற
அணிலுக்கான அன்றாட ஜீவிதம்
அவ்வளவு இலகுவானதல்ல என்பதுவும்
சில தருணங்களில்
நன்றியில்லாத காகங்கள் அமர்ந்திருக்கும்
கொய்யா மரக்கிளை பற்றியதான வெறுப்பு
அணில் குஞ்சுகளுக்கும் சேர்த்துத்தான்
இருந்தபோதிலும்
கபடமில்லாத ஒரு அணில் குஞ்சு போலாவது
இங்கே வாழ்வதில் சிக்கலில்லைஎன்பது
எனக்குள் பிறப்பெடுக்கிற மனித உணர்வின்
வழமையான பொறாமையும்தான்
மற்றவருக்காக பாதியை புசிக்கும்
அணிலாகி ஜீவிதம் நகர்த்துவதில்
இனியும் எனது சஞ்சாரம் தொடரலாம்
என் வீட்டு முற்றத்தின்
கொய்யா மரக்கிளை தறிக்கப்படும் வரை .
-எஸ்.ஜனூஸ்-