Published On: Friday, March 15, 2013
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தமிழர் நீதிக்கான எழுச்சிப் பேரணி
இலங்கையில் நிகழ்ந்தேறிய பேரவலத்தின் சாட்சியங்களை கொண்ட பதாகைகளை தாங்கியவாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்க்கமான முடிவுகளை எடுக்குமாறு வலியுறுத்தி அவுஸ்திரேலியாவின் கான்பராவில் நீதிக்கான எழுச்சிப் பேரணியொன்று நடைபெற்றது.
இதுகுறித்து அவுஸ்திரேலியா நாட்டில் இயங்கிவரும் தமிழர் நீதிக்கான செயலணி துருவத்துக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
இலங்கைமீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும், தமிழ் மக்களுக்கு நீதியான நீடித்து நிலைக்கக்கூடிய சுதந்தரமான கௌரவமான அரசியலுரிமை பெற்றுக் கொடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த எழுச்சிப் பேரணி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டார்கள்.
தமிழர்கள் அதிகமாக வாழும் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான கான்பராவில் வாழும் தமிழர்களுடன் இணைந்து நடைபெற்ற இப்பேரணி கடந்த புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு அவுஸ்திரேலியாவின் பாராளுமன்றம் முன்பாக ஆரம்பமானது.
பேரணியில் கலந்துகொண்டு கிறீன் கட்சித் தலைவரும் செனட்டருமான கிறிஸ்ரின் மிலின், செனட்டர் லீ றியானன், ஜனநாயக தொழிற்கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜோன் மடிகன், லிபரல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் குடிவரவுத்துறை அமைச்சருமான பிலிப் றுடொக், அவுஸ்திரேலிய ஆளும்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மிசால் றோவ்லன் உட்பட பல அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் தமிழ் செயற்பாட்டாளர்கள் உரையாற்றினர்.
இப்பேரணியின்போது அவுஸ்திரேலிய அரசபிரதிநிதிகளிடமும் ஏனைய நாட்டு தூதுவராலயங்களின் பிரதிநிதிகளிடமும் அவுஸ்திரேலிய தமிழ்மக்களின் கோரிக்கைகள் தாங்கிய மனுக்கள் அனைத்து அவுஸ்திரேலிய அரசியல் தமிழ் அமைப்புக்களின் சார்பில் கையளிக்கப்பட்டன.
பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய தூதுவராலயங்களுக்கு பேரணியாகச்சென்று தமிழர்களிள் கோரிக்கைகள் தாங்கிய இம்மனுக்கள் கையளிக்கப்பட்டன.
(தமிழர் நீதிக்கான செயலணி, அவுஸ்திரேலியா)