Published On: Sunday, March 17, 2013
இலங்கை பிக்குவை தாக்கிய 15 இந்தியர்கள் கைது
ஆராய்ச்சி பணிக்காக இலங்கையில் இருந்து தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த புத்த பிக்குவை தாக்கிய 15 பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். டெல்லியிலுள்ள தொல்லியல் ஆராய்ச்சி மையத்தில் பயின்று வரும் சீனா, தாய்லாந்து, பர்மா, இலங்கை மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த 19 மாணவர்கள், தொல்லியல் துறை ஆய்வு பணிக்காக தஞ்சை பெரிய கோயிலுக்கு நேற்று வந்தனர்.

இவர்களில் இலங்கையை சேர்ந்த புத்த பிக்கு கனலேகாவும் ஒருவர். இவர்கள் நேற்று காலை பெரிய கோயிலில் சிற்ப கலைகள் குறித்து ஆய்வு பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சி, தமிழ்தேச பொதுவுடமை கட்சி, மதிமுகவினர் உட்பட 15 பேர் வந்து புத்தபிக்குவை கோயிலை விட்டு வெளியேற்றக் கோரி கோஷமிட்டனர். அப்போது ஆய்வு மாணவர்கள் அனைவரும் வெளியில் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் புத்த பிக்குவை ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென சுற்றிவளைத்து தாக்க தொடங்கினர்.
இதனால் பயந்துபோன கனலேகா அங்கிருந்து ஓடினார். அவரை ஆர்ப்பாட்டக்காரர்கள் விரட்டி விரட்டி அடித்து உதைத்தனர். இதையடுத்து புத்த பிக்கு உள்ளிட்ட 19 பேரும் தொல்லியல்துறை அலுவலகத்திற்குள் தஞ்சமடைந்தனர். தகவலறிந்த ஆர்டிஓ காளிதாஸ், எஸ்பி அன்பு, தாசில்தார் முருகதாஸ், இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், சோமசுந்தரம் மற்றும் பொலிஸார் அங்கு வந்து பிக்குவை தாக்கிய 15 பேரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை பாதுகாப்பாக 2 வேன்களில் ஏற்றி திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்