Published On: Thursday, March 28, 2013
யாழில் வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி மரணம்

யாழ். ஓட்டுமட பகுதியில் நேற்று மாலை இனம்தெரியாத நபர்களினால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் கல்லூரி வீதியை சேர்ந்த முஹமட் நிஹால் (வயது 55) என்பவராவார். இறைச்சிகடை நடாத்திவரும் இவருக்கு ஏற்கனவே ஒரு குழுவினருடன் குரோதம் இடம்பெற்று அடிக்கடி இப்பிரதேசத்தில் சண்டைகள் ஏற்படுவதாக பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.
இக்கொலை முயற்சி நன்கு திட்டமிட்டு வெளியிடத்திலிருந்து ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடாத்தி வரும் யாழ். பொலிஸார் இன்று மதியம் கொலைக்காக பயன்படுத்தப்பட்டதென வாள் ஒன்றினை கிணறு ஒன்றில் இருந்து மீட்டுள்ளனர்.
(பாறூக் சிகான்)