Published On: Wednesday, March 27, 2013
வீதியில் இடைமறித்து வாள் வெட்டு, அசிட் வீச்சு: யாழில் சினிமா பாணியில் தாக்குதல்

யாழ். ஓட்டுமடம் பகுதியில் இடம்பெற்ற அசீட் வீச்சு மற்றும் வாள்வெட்டு சம்பவத்தில் முஸ்லிம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பொம்மைவெளி பகுதியை சேர்ந்த முஹமட் நிஹால் (வயது 55) என்பவரே படுகாயமடைந்தவராவார்.
குறித்த காயமடைந்த நபர் தனது வீடு நோக்கி கல்லூரி வீதியால் மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது, இடையில் வழிமறித்த கொண்ட தலைக்கவசம் அணிந்த நால்வர் சினிமா பாணியில் வெட்டிவிட்டு, அசிட் வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலினால் காயமடைந்த குறித்த நபரின் கையொன்று துண்டாகிய நிலையில் வீதியில் கிடந்தது. சம்பவ இடத்தில் மக்களின் கவனம் திரும்பவே தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். உடனடியாக பொலிஸார் விசாரணைகளை சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அசிட் வீச்சினால் காயமடைந்தவரின் உடல் அதிகளவில் சிதைந்துவிட்டது. இத்தாக்குதல் தனிப்பட்ட குரோதம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
(பாறூக் சிகான்)