Published On: Sunday, March 17, 2013
முஸ்லிம்களின் இக்கட்டான நிலைக்கு ஒரே ஆயுதம் துஆ பிரார்தனையாகும்

எமது சமூகம் பொறுமையாளர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். இக்காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கு இருக்கும் ஒரேயொரு ஆயுதம் துஆ பிரார்த்தனையாகும். முஸ்லிம் சமூகம் பொறுமையுடன் எமக்கு முன்னுள்ள சதிகாரர்களுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்துவத்திற்கான தேசிய பணிப்பாளரும், அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.சீ. யஹ்யாகான் தெரிவித்தார்.
கட்சியின் புதிய அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் சமாதான நீதிவான்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கல்முனை அலுவலகத்தில் நடைபெற்றபோது, உரையாற்றுகையிலேயே ஏ.சீ யஹ்யாகான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றும்போது; மக்கள் அரசியல்வாதிகளை வழிநடாத்த வேண்டும். அப்போதுதான் எமது பிரதேசத்தின் தேவைகள் சிறப்பாக பூர்த்திசெய்யப்படும். ஒவ்வாரு தனிமனிதனும் தனது சொந்த தேவைகளுக்காக அரசியல்வாதியை நாடாமல் ஒரு குழுவாக சேர்ந்து சிறந்த கட்டமைப்புடன் நமது பிரதேச தேவைகளை முன்வைத்து அரசியல்வாதிகளிடம் செல்லும்போது அவை நிறைவேற்றப்படும்.
இன்று பிளவுகள் அதிகரிக்கப்பட்டதனால் கல்வி, கலாசாரம், வாழ்வியல் போன்ற விடயங்களில் எமது சமூகம் பின்நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அரசியல் ரீதியாக பிளவு, மார்க்க ரீதியாகப் பிளவு, தன்னலம் என்பது மனித மனங்களில் மேலோங்கி பொதுநலம் என்பது அணுவளவும் இல்லாமல் போய்விட்டது என்று மேலும் கூறினார்.
(எஸ்.அஷ்ரப்கான்)