Published On: Saturday, March 30, 2013
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்சிகளை தடைசெய்யவும்: காங்கிரஸ்

மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகளை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் இலங்கையில் கடந்த கால நிகழ்வுகளுக்கும், தமிழர்களின் துன்பங்களுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரன்தான் காரணம். இலங்கை தமிழ் தலைவர்களான அமிர்தலிங்கம், ஸ்ரீ சபாரத்தினம், பத்மநாபா, உமாசங்கர் போன்ற தலைவர்கள், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சாவுக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம்.
எனவே, விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர், தமிழ் தேச பொதுவுடமை கட்சி, தமிழர் விடுதலை இயக்கம், தமிழீழ மாணவர் கூட்டமைப்பு, மே 17 இயக்கம், தமிழர் விடுதலை முன்னணி, தமிழ்தேச கூட்டமைப்பு உள்ளிட்ட பெயர்களில் ஈடுபடும் கட்சிகள், இயக்கங்களை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் முதல் குடிகளாக நடத்தப்பட இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் குடிநீர்த்தட்டுப்பாடு, மின்தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, மாவட்ட சிறுபான்மைப்பிரிவு பொதுச்செயலர் கே.என்.பாஷா, துணைத் தலைவர் முகமது அர்ஷத், இளைஞர் பிரிவு நிர்வாகி ராஜேஸ் ராஜப்பா உள்பட பலர் பங்கேற்றனர்.
(சென்னையிலிருந்து சாஹுல்)
(சென்னையிலிருந்து சாஹுல்)