Published On: Saturday, April 13, 2013
உதயன் தாக்குதலுக்கு முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்
வட பிராந்திய மக்களின் குரலாகச் செயற்பட்டு வரும் உதயன் பத்திரிகையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைச் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது தொடர்பில் அதன் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என். எம். அமீன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
உதயன் பத்தரிகை மீதும் அதன் ஊழியர்கள் மீதும் நடத்தப்பட்டுள்ள 32 ஆவது தாக்குதல் இதுவாகும். இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி அவர்களுக்கான தண்டனையைப் பெற்றுக் கொடுப்பது அரசின் கடமையாகும்.
எமது தாய் நாடு தொடர்பில் சர்வதேசத்தில் மேலும் அபகீர்த்தி ஏற்படுத்தும் ஒரு செயலாகவே இதனை நோக்க முடியும். இவ்வாறான சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
வடமாகாண சபைத் தேர்தலில் நடத்தப்படவுள்ள நிலையில் அந்த மாகாண மக்களின் கருத்துகளை அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பினை ஊடகங்களினாலேயே வழங்க முடியும். இவ்வாறானதொரு நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை ஒரு திட்டமிட்ட செயல் என்றே கருத முடியும்.
ஊடக சுதந்திரம், கருத்து தெரிவிக்கும் உரிமை மற்றும் மக்கள் தகவல் அறியும் உரிமைகளை இல்லாமல் செய்யும் எந்தச் செயற்பாடும் ஜனநாயகத்தின் மீதான சாவு சாவுமணியாகவே அமையும் என அமீன் தெரிவித்துள்ளார்.
