Published On: Wednesday, April 10, 2013
இந்தியாவில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் விரைவில்: ஜெயலலிதா

ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இன்று புதன்கிழமை பேரவையில் 110 விதியின் கீழ் அவர் அளித்த அறிக்கையில், இதனைத்தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில்: நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கட் தொகைக்கேற்ப குடிமைப் பணிகளை உயர்ந்த அளவில் நிறைவேற்றிக் கொடுப்பதும், நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதும் உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய கடமை என்றாலும், மாநில அரசுக்கும் இதில் பொறுப்பு உள்ளது. இதனை உணர்ந்த அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்ல சுற்றுப்புற சூழலை ஏற்படுத்துவதிலும், பொது சுகாதாரத்தை பராமரிப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவதிலும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் 3.80 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 3.80 மில்லியன் லிட்டர் குடிநீரை பெற முடியும். இதே போன்று, ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் தான் வடிவமைக்கப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் உள்ளூர் நீராதாரங்களின் தரமும், நம்பகத்தன்மையும் தற்போது குறைந்து வருவதால், இம்மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க நிரந்தரத் தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது.
எனவே, சென்னை மாநகரத்தின் நீர்த் தேவையை சமாளிக்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது போல், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நிலவும் நிலத்தடி நீரின் நிலையற்ற தன்மை மற்றும் குடிநீர் தர பிரச்சனை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து காலங்களிலும் நிரந்தரமாக மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் வகையில் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், தலா 100 மில்லியன் லிட்டர் குடிநீர் திறனுடைய கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்படும். என்றார் முதல்வர்.
(சென்னையிலிருந்து சாஹுல்)