Published On: Wednesday, April 10, 2013
இரவுநேரத்தில் பயணிகளுடன் சென்ற ரயில் பெட்டிகள் யானைக் காட்டில் துண்டிப்பு

நேற்றிரவு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவுநேர இன்ரசிற்றி கடுகதி ரயிலின் பாதியளவான பெட்டிகள் ஹபறணையிலுள்ள யானைக் காட்டுப் பகுதியில் கழன்று துண்டிக்கப்பட்டு விட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் பயணிகள் பெரும் பயப்பீதியில் அல்லோலகல்லோலப்பட நேர்ந்ததாகத் தெரிவித்தனர்.
2ஆம் வகுப்பு உறங்கலிருக்கைக்கும் 3ஆம் வகுப்புக்கும் இடையில் உள்ள கொழுவி கழன்றதால் புகையிரதப் பெட்டிகள் நடுக்காட்டில் துண்டித்து விடப்பட்டுள்ளன. கல்லோயாவுக்கும் ஹபறணைக்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் ஒரு மணித்தியால தாமதம் ஏற்பட்டதாக கல்லோயா புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்.
புகையிரதம் நெழிவு சுழிவாகச் செல்லும்பொழுது குலுக்குப்படுவதால் சமயங்களில் இவ்வாறு ரயில் பெட்டிகள் கழன்று பிரதான புகையிரதத்துடனிருந்து துண்டிப்பதுண்டு என கல்லோயா புகையிரத நிலைய அதிகாரி கூறினார்.
துண்டிக்கப்பட்ட புகையிரதத்திலிருந்த புகையிரத உத்தியோகத்தர்கள் அருகிலுள்ள புகையிரத நிலையங்களுக்குத் தகவலை அனுப்பியதன் பேரில் முன்னோக்கிச் சென்ற என்ஜினுடனான பிரதான புகையிரதம் பின்னோக்கிச் செலுத்தப்பட்டு மீண்டும் கழன்று போன பெட்டிகள் இணைக்கப்பட்டுப் பயணம் தொடர்ந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.
(குகதர்சன்)