Published On: Thursday, April 04, 2013
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு திவிநெகும புதுவருட சந்தை

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் எதிர்வரும் சிங்கள, தமிழ் சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு நாடுமுழுவதிலும் திவிநெகும புது வருடசந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்பாரை மாவட்ட திவிநெகும புதுவருட சந்தை நிகழ்வானது 08ஆம், 09ஆம் திகதிகளில் அம்பாரை நகரசபை மண்டப வளாகத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
அம்பாரை மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மீள் எழுச்சிதிட்டத்தின் மூலம் 57 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு வாழ்வாதார, அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.
இக்கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார நுண்கடன் வழங்கப்பட்டு பல்வேறுபட்ட வாழ்வாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்படி கிராம பயனாளிகளினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கோடும், மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதுமே இச்சந்தை நிகழ்வின் பிரதான நோக்கமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித்திட்ட அம்பாரை மாவட்ட பிரதி திட்டப் பணிப்பாளர் திஸ்ஸ பல்லேகும்புர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இச்சந்தைவாய்பானது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் நாடுமுழுவதிலும் நடைமுறைப் படுத்தப்படுவதோடு சிங்கள, தமிழ் சித்திரை புத்தாண்டினை கொண்டாடும் அனைத்து மக்களும் சிறப்பாக கொண்டாடுவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குவது மட்டுமன்றி மக்களின் பொருளாதார சுமையினை குறைத்து இப்புதுவருடத்தினை சிறப்பாக கொண்டாடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதாகும்.
பல்வேறுபட்டஅரச,தனியார் நிறுவனங்களின் பொருட்கள் சேவையினையும் இச்சந்தைநிகழ்வில் மக்களால் பெற்றுக்கொள்ளமுடிவதோடு ஆரம்ப நிகழ்வில் அம்பாரை மாவட்டத்தை பிரதிநிதிதுவப்படுத்தும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேச அரசியல்வாதிகள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்தார்.