Published On: Monday, May 27, 2013
ஜோர்தானில் பலியான காந்திமதிக்காக ஆர்ப்பாட்டம்: மகஜரும் கையளிப்பு
ஜோர்தான் நாட்டில் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாகக் கூறப்படும் வாழைச்சேனை கறுவாக்கேணியைச் சேர்ந்த நாகேந்திரன் காந்திமதியின் மரணம் தொடர்பில் ஜோர்தான் அரசாங்கம் நீதியான தீர்ப்பை வழங்க வேண்டும் என்று இவரது தாயார் நாகேந்திரன் மங்களேஸ்வரி பிரதேச செயலாளருக்கு கையளித்துள்ள மகஜரில் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கறுவாக்கேணி பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் காந்திமதி (வயது 21) என்பவரே ஜோர்தான் நாட்டில் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பில் ஜோர்தான் நாட்டின் இலங்கைக்கான தூதரகத்திற்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைக்கும் முகமாக கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.தினேஸிடம் இந்த மகஜரை கையளித்துள்ளார்.
ஜோர்தான் நாட்டில் துப்பாக்கி சூட்டில் பலியானதாகக் கூறப்படும் நாகேந்திரன் காந்திமதியின் மரணத்தை கண்டித்து கறுவாக்கேணி பகுதியிலிருந்து பொதுமக்களுடன் ஊர்வலமாகச் சென்றே இந்த மகஜரை மரணமாக பெண்ணின் தாயார் நாகேந்திரன் மங்களேஸ்வரி கையளித்துள்ளார்.
இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; எனது இரண்டாவது மகளாகிய நாகேந்திரன் காந்திமதி கடந்த 2010ஆம் ஆண்டு ஜோர்தான் நாட்டுக்கு பணிப்பெண்ணாக தொழில் பெற்றுச் சென்றார்.
கடந்த 2013.05.08ஆம் திகதி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக தூதரகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது. அத்துடன் அவரது சடலம் இந்த மாதம் 25ஆம் திகதி எமக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் எப்படி? யாரால்? ஏன்? சுடப்பட்டார் என்பது பற்றி அறியத்தரவில்லை.

ஏழைகளாகிய எமது பொருளாதாரக் கஷ்டம் காரணமாகவே பணிப்பெண்ணாக அவர் தொழில் செய்யச் சென்று இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார். எனவே எனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஜோர்தான் நாட்டு அரசாங்கம் நீதியான தீர்ப்பை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்தான் நாட்டில் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாகக் கூறப்படும் இந்தப் பெண்ணின் சடலம் வாழைச்சேனை கறுவாக்கேணி இந்து மயானத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
(குகதர்சன்)