Published On: Thursday, May 09, 2013
அஸாத் சாலி கைதின் எதிரொலி: அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால்
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அஸாத் சாலியின் கைதினைக் கண்டித்தும் அவரை விடுதலை செய்யக்கோரியும் இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

இதனால் வியாபார நிலையங்கள் முற்றாக மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. பாடசாலைகள் திறக்கப்பட்டு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சமூகமளித்திருந்தும் மாணவர்களின் வரவு மிகக்குகுறைவாகவே இருந்தததை காணக்கூடியதாக உள்ளது.

நேற்று இரவு தொடக்கம் இராணுவம் இப்பிரதேசத்தில் குவிக்கப்பட்டு பிரதான வீதியில் எந்தவிதமான அசம்பாவிதங்கள் நடைபெபெறாமல் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதுமட்டுமல்ல வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

09,10 ஆம் திகதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதுடன், ஹர்த்தால் அனுஷ்டிக்கவோ இயல்பு நிலைமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படவோ வேண்டாம் என இராணுவத்தினர் கிழக்கு மாகாண முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
(எம்.பைஷல் இஸ்மாயில், எஸ்.அஷ்ரப்கான்)