Published On: Thursday, October 16, 2014
கல்முனை டொபாசஸ் விளையாடுக் கழகம் அரையிறுதிக்கு தெரிவு
மேயர் சவால் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியின் முதலாவது கால் இறுதிப் போட்டியில் கல்முனை டொபாசஸ் விளையாடுக் கழகம் வெற்றியீட்டி அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
கல்முனை மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்டு வருகின்ற மேயர் சவால் கிண்ண கடின பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் முதலாவது கால் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் மாநகர முதல்வரின் பிரத்தியேக செயலாளர் அல்ஹாஜ் ரீ.எல்.எம்.பாறூக் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
மேயர் சவால் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியின் முதலாவது கால் இறுதிப் போட்டிக்கு கல்முனை டொபாசஸ் விளையாடுக் கழகமும் மிஸ்பாஹ் விளையாட்டுக் கழகமும் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை டொபாசஸ் கழகம் நான்கு விக்கட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை மிஸ்பாஹ் கழகம் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இதன் பிரகாரம் கல்முனை டொபாசஸ் கழகம் வெற்றியீட்டி அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக கல்முனை டொபாசஸ் கழக வீரர் எச்.எம்.பைசால் தெரிவானார். இவர் 22 பந்துகளை எதிர்கொண்டு 28 ஓட்டங்களை பெற்றதுடன் 4 ஓவர் பந்து வீசி 19 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டுகளை வீழ்த்தினார். இவருக்கான விருது பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டது.
இப்போட்டியின் போது கவிஞர் எம்.ஏ.சி.சாஹிர் கரீம் மற்றும் எம்.எம்.றஸீன் ஆகியோர் நேரடி வர்ணனையை மேற்கொண்டனர்.
அதேவேளை மேயர் சவால் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியின் மற்றொரு கால் இறுதிப் போட்டி இன்று கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற வுள்ளது. இப்போட்டியில் கல்முனை ஜிம்கானா கழகமும் கல்முனை லெஜன்ஸ் கழகமும் மோதவுள்ளன என்று அறிவிக்கப்படுகிறது.
இந்த மேயர் சவால் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டி கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு 16 அணிகள் பங்கேற்றுள்ள இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
(அஸ்லம் எஸ்.மௌலானா)
