Published On: Monday, October 20, 2014
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியதற்கு எதிராக இலங்கை மேன்முறையீடு
விடுதலைப்புலிகள் மீதான தடையை விலக்கி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியமைக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேன்முறையீடு செய்வதற்கு தீர்மானித்துள்ளது. தீர்ப்பு வழங்கியதிலிருந்து இரு மாதங்களுக்குள் குறித்த தீர்ப்பு குறித்து மேன்முறையீடு செய்யமுடியும்.
இதன் முதற்கட்டமாக ஐரோப்பிய யூனியன் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஆதரவு திரட்டுவதற்காக தனது தூதர் ரோட்னி பெரைராவை இலங்கை, ஐரோப்பிய பாராளுமன்றம் அமைந்துள்ள ஸ்டிராஸ்பர்க் (கிழக்கு பிரான்ஸ்) நகருக்கு இன்று திங்கட்கிழமை அனுப்புகிறது. அங்கு ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார்.
அப்போது அவர், விடுதலைப்புலிகளுக்கு எதிராக அங்குள்ள 2 முக்கிய குழுக்களான வெளியுறவு குழு, பாதுகாப்பு குழு ஆகியவற்றின் ஆதரவை பெற முயற்சி எடுப்பார் என தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் அவர், ஐரோப்பிய கவுன்சிலின் ஆதரவையும் பெறுவதற்கு முயற்சிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.
தமிழீழம் கோரி போராடிய விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்திருந்தன. கடந்த 2006ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் பிறப்பித்த தடையை எதிர்த்து விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில் லக்சம்பேர்க்கில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை நீக்கிக்கொள்வதாக கடந்த 16ஆம் திகதி தீர்ப்பளித்தது. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி பிறப்பித்த உத்தரவு இன்னும் 3 மாதங்களுக்கு பின்னரே நடைமுறைக்கு வரும். விடுதலைப்புலிகள் மீதான தற்போதைய கட்டுப்பாடுகள் பொருத்தமற்றவை, கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அதுபற்றி இரு மாதங்களுக்குள் யோசனைகளை வழங்கலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
