Published On: Sunday, October 19, 2014
ஆபாசப் படங்களை விற்றவர்கள் கருணைக் கொலைக்கு மனு
கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் ஆபாசப் படங்களை விற்று பொலிஸில் மாட்டிய 8 பேர் தங்களைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு ஆட்சியர் சேகரப்பாவிடம் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிக்மகளூர் மாவட்டம் என்.ஆர் புரா தாலுகாவில் கடந்த 8 ஆண்டுக்கு முன்பு ஒரு அரசியல் பிரமுகரின் மகளின் ஆபாச படம் ஒன்று செல்போன் மூலம் பரவியது. இதுதொடர்பாக என்.ஆர்.புராவை சேர்ந்த அகமத் பாஷா, சிவகுமார், செபாஸ்டின், தஸ்தகீர், கிருஷ்ணா, அசோக், சுஜீத், சந்தோஷ் சர்மா உள்ளிட்ட 8 பேரை என்.ஆர்.புரா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 2012இல் பிணையில் வெளியே வந்த 8 பேரும், தங்கள் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும் என்று என்.ஆர்.புரா தாசில்தார் மூலமாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் கொடுத்தனர்.
ஆனால் அதன் பின்னர் அவர்களது கடிதம் தொடர்பாக எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த 8 பேரும் சிக்மகளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். நாங்கள் ஆபாச படங்களை செல்போனில் பகிர்ந்து கொண்டதாக பொலிஸார் எங்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பொய்யான வழக்கு எனக் கூறியும், இந்த வழக்கில் இருந்து விடுக்கவிக்கவும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினோம். ஆனால் இதுவரை எங்களது கடிதத்திற்கு பதில் கடிதம் வரவில்லை என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த பொய் வழக்கால் எங்களது 8 பேரின் குடும்பத்தினரும் பெரும் அவமானத்திற்கு உள்ளாகியுள்ளனர். நாங்களும் மனவேதனை அடைந்துள்ளோம். எனவே பொய்யாக தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து எங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்களை கருணை கொலை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இக்கடிதம் சிக்மகளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
