Published On: Wednesday, October 22, 2014
கூட்டமைப்பின் 33 மாகாணசபை உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 33 மாகாணசபை உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. வட, கிழக்கில் படையினர் தமிழ் மக்களை கொன்று குவித்தாக தெரிவித்து குறித்த 33 மாகாணசபை உறுப்பினர்களும் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையிடம் எழுத்துமூலம் முறைப்பாடு செய்துள்ளதாக இவர்கள்மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த மாகாணசபை உறுப்பினர்களின் இந்த முறைப்பாட்டினால் நாட்டின் இன நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாகும், இதனால் நாட்டுக்கு அவமதிப்பை தேடித்தந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு தேசப்பற்றுடைய அமைப்பின் அழைப்பாளரான கால்லகே ரவீந்திர ரொஸான் என்பவரினால் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு குறித்த மாகாணசபை உறுப்பினர்கள் கடிதமொன்றின் மூலம் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர் என மனுதாரரினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன ஐக்கியத்தை சீர்குலைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளல் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படக்கூடிய குற்றச்செயல் என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்ட மா அதிபரோ காவல்துறை மா அதிபரே நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நாட்டின் பொறுப்பு வாய்ந்த பிரஜை என்ற அடிப்படையில் இந்த மனுவை தாக்கல் செய்வதாகத் ரவீந்திர ரொஸான் தெரிவித்துள்ளார். இந்த மனுவின் பிரதிவாதிகளாக 33 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும், சட்ட மா அதிபரும், காவல்துறை மா அதிபரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட அனைவரும் எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென மனுவை பரிசீலனை செய்த இருவர் அடங்கிய நீதவான் குழாம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி குறித்த வழக்கின் பிரதிவாதிகள் அனைவருக்கும் நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வட மாகாண சபையைச் சேர்ந்த 28 உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபையைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித கருத்துகளையும் வெளியிடவில்லை.
