Published On: Tuesday, July 28, 2015
இந்தியா 2020–ம் ஆண்டு வல்லரசாக வேண்டும் என்பது தான் அவரது ஆசை அப்துல் கலாமின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நண்பர் சம்பத்குமார் உருக்கம்

கோவை சாய்பாபா காலனியில் வசித்து வருபவர் சம்பத்குமார் (வயது 84). இவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நண்பர் ஆவார். அப்துல்கலாம் திருச்சியில் கல்லூரியில் படித்தபோது சம்பத்குமாரும் உடன் படித்தார்.
அப்துல்கலாமின் மறைவு செய்தி கேட்டு சம்பத்குமார் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவர் கூறியதாவது:: 1950–ம் ஆண்டு திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் நான் பி.எஸ்சி. கணிதம் படித்தேன். அவர் அதே கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியல் படித்தார்.நானும், அவரும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். கல்லூரி பருவத்திலேயே அவர் மிகவும் எளிமையாக இருந்தார். இதனால் அவர் மீது பலரும் மரியாதை வைத்திருந்தனர்.கல்லூரி படிப்பை முடித்ததும் அவர் சென்னையில் உள்ள கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் படித்து விஞ்ஞானியானார். பின்னர் அவர் நமது நாட்டின் ஜனாதிபதியானதும் நான் அவரை சந்திக்கச் சென்றேன்.
அப்போது ஜனாதிபதி என்ற கவுரவம் இல்லாமல் எப்போதும் என்னுடன் இருப்பது போல் இருந்தார். நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த அப்துல்கலாம் நமது நாட்டில் குழந்தைகள் காப்பகமே இருக்கக்கூடாது என்று என்னிடம் அடிக்கடி சொல்வார்.இந்தியா 2020–ம் ஆண்டு வல்லரசாக வேண்டும் என்பது தான் அவரது ஆசை. அணு ஆயுதங்கள் அழிவை ஏற்படுத்தும் என்றாலும் அதை வைத்திருந்தால் நமது நாட்டின் பலத்தை காட்ட முடியும் என்ற எண்ணம் கொண்டவர். அழிந்து வரும் மொழிகளில் தமிழும் உள்ளது வேதனைக்குறியது. தமிழை மீட்டெடுத்து வளர்க்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்பதே அவரது விருப்பம். அதனை நாம் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு சம்பத்குமார் கூறினார்.