Published On: Tuesday, July 28, 2015
அப்துல் கலாம் மறைவு: சோகத்தில் மூழ்கிய ராமேசுவரம்

அப்துல்கலாம் மறைந்த தகவல் வெளியானதும் ராமேசுவரமே சோகத்தில் மூழ்கியுள்ளது. உடலை ராமேசுவரத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது சகோதரர் முத்துமீரான் லெப்பை மரைக்காயர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் வீடு ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ளது. அப்துல் கலாம் மறைந்த தகவல் வெளியானதும், கண்ணீருடன் வீட்டில் ஏராளமான பொதுமக்கள், உறவினர்கள் சோகத்துடன் திரண்டுள்ளனர். மேலும் அரசுத் துறையினர், அனைத்து கட்சியினர், பல்வேறு அமைப்பினர் என ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டுள்ளனர். ராமேசுவரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் சோகமாகக் காட்சியளிக்கிறது.
கலாம் மறைந்த தகவல் கிடைத்ததும் அவரது சகோதரர் முத்துமீரான் லெப்பை மரைக்காயர் கண்ணீர் விட்டார். தனி அறையில் உள்ள இவரை யாரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. தனது சகோதரர் உடலை சொந்த ஊரான ராமேசுவரத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என முத்துமீரான் லெப்பை மரைக்காயர் விருப்பம் தெரிவித்துள்ளார். கலாம் உடன் பிறந்தவர்கள் 3 அண்ணன்கள், ஒரு அக்கா. ஒரு அண்ணன் தவிர மற்றவர்கள் இறந்துவிட்டனர். இவர்களது வாரிசுகள் அனைவரும் கலாம் வீட்டுக்கு வந்துவிட்டனர்.