Published On: Tuesday, July 28, 2015
டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் குடியரசுத் தலைவரானது எப்படி?

ஏவுகணை விஞ்ஞானி’ என்று உலகம் முழுவதும் புகழப்பட்ட அப்துல் கலாம் அவருடைய கடின உழைப்பு, அன்பு, அடக்கம், குழுவாக இணைந்து பணியாற்றும் ஆற்றல் காரணமாகவே குடியரசுத் தலைவர் பதவிக் கான வேட்பாளராகவும் தேர்ந்தெடுக் கப்பட்டார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவருடைய கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்களித்தால் மட்டும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று விடுவது நிச்சயம் என்று சொல்ல முடியாது என்ற நிலையே நிலவியது. கட்சி சார்பில் அரசியல்வாதி யாரை நிறுத்தினாலும் கடும் போட்டி ஏற்படும் என்பதால் கருத்தொற்றுமை அடிப்படையில் பொதுவான ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
பொக்ரானில் நடந்த இரண்டாவது அணுகுண்டு வெடிப்பை கச்சிதமாக செய்து முடித்த கலாமைத் தவிர வேறு யாரும் அப்பதவிக்குப் பொருத்தமானவராக இல்லை. தென்னிந்தியர், இஸ்லாமியர், சர்ச்சைக்கு இடமில்லாத அறிவியர் அறிஞர் என்ற காரணங்களால் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் சில விமர்சகர்களோ, அரசியலில் அதிகப் பழக்கம் இல்லாத கலாமைத் தேர்ந் தெடுக்கக் காரணம் அவர் அரசியல் தலைமை சொன்னபடி கேட்பார் என்பதால்தான் என்று பேசத் தொடங்கினர்.
அப்துல் கலாம் குடியரசுத் தலைவரான பிறகு அவரு டைய செயலைப் பார்த்த விமர்சகர்களும் அரசியல் தலைவர்களும் வாயடைத்தனர். காரணம் எந்த ஒரு பிரச்சி னையையும் ஆழ ஊன்றிக் கவனித்து, சட்டப்படியும் நியாயப் படியும் என்ன செய்ய வேண்டுமோ அதை உரிய ஆலோசகர்களைக் கலந்த பிறகு தீர்மானித்து செயல்படுத்தினார். எனவே அவருடைய எந்த முடிவும் கடினமான விமர்சனத்துக்கு உள்ளாகவில்லை.
போர் விமானங்களை ஓட்டும் விமானியாக வேண்டும் என்ற ஆசை அப்துல் கலாமுக்கு நிறைய இருந்தது.ஆனால் காலம் அவருக்கு மகத்தான பணிகளைத் தரக் காத்திருந்தது. எனவே போர் விமானிக்கான தேர்வுக்குச் சென்ற போது மொத்தம் கலந்துகொண்ட 25 பேரில் ஒன்பதாவதாக அவர் தேறினார்.
தேவைப்பட்ட போர் விமா னிகள் எண்ணிக்கையே 8 தான் என்பதால் நூலிழையில் அந்த வாய்ப்பை இழந்தார். வாய்ப்பை இழந்த சோகம் தாக்க நேராக ஹரித்துவார் சென்றுவிட்டார். அங்கே அவருக்கு மனசாந்தி ஏற்பட்டது. இனி செல்ல வேண்டிய பாதை எது என்று ஒரு முடிவுக்கு வந்தவராக மூத்த அறிவியல் உதவியாளராக மீண்டும் பணியைத் தொடர்ந்தார். படிப்படியாக பெரும் பொறுப்பு களை ஏற்றார்.