Published On: Thursday, July 30, 2015
4 ஆசனத்தையாவது தமிழர்கள் கைப்பற்ற வேண்டுமாயின் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு வேண்டுகின்றேன் - மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களாகிய நாம் 75 வீதமாகவும், முஸ்லிம்கள் 24 வீதமாக இருக்கின்றனர். இவ்வேளை 5 ஆசனங்கள் மட்டக்களப்புக்கு உண்டு. இதில் குறைந்தது 4 ஆசனத்தையாவது தமிழர்கள் கைப்பற்ற வேண்டுமாயின் அனைவரும் யானை, வெற்றிலை சின்னத்துக்கு வாக்களித்து வேறு இனத்தவர்கள் வருவதை தடுத்து நிறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு வேண்டுகின்றேன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி சார்பாக மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
வாகரை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்!
இப்பாராளுமன்ற பதவியை கொண்டு என்னையோ, எனது குடும்பத்தையோ, எனது குடும்ப உறவுகளையோ அபிவிருத்தியடைய செய்யவில்லை. தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுத்து பணமும் பெறவில்லை. காரணம் இது ஒரு தூய பணி அதை திறம்பட மேற்கொள்வதை கடமையாக கொண்டேன். எனது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் பின் எனது குடும்பம், எனது உறவுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து தமிழ் மக்களுமே என்பதையே கருத்தில் கொண்டு செயற்பட்டேன்.
அந்த வகையில் எமது மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை இறைவன் அருளால் வழங்கியுள்ளேன். இனிவரும் காலங்களிலும் நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகும் பட்சத்தில் அப்பதவியை எம்மக்களின் உரிமை அபிலாசையை நிறைவேற்றும் நோக்குடன் மிகவும் நேர்மையாக இலஞ்சம், ஊழல் அற்று தர்மத்தை கடைப்பிடித்து செயற்படுத்துவேன். கடந்த காலத்தை போன்றும் இன்னும் அதற்கு மேலாகவும் பல பணிகளை ஆற்ற சித்தமாக உள்ளேன்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் முடிவானது நீண்டகாலமாக இம்மண்ணில் எது தமிழ் இனத்தின் உரிமைக்காக போராடிய எமது உறவுகளின் தியாகங்களின் முடிவை சர்வதேசத்தின் அனுசரணையுடன் பெறக்கூடிய சூழலை தரவல்லதாகும்.
இந்த வகையில் தமிழினத்தின் தலை விதியை நிர்ணயிக்கும் இத்தேர்தலில் இதற்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்களை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.
எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களாகிய நாம் 75 வீதமாக இருக்கின்றோம், முஸ்லிம்கள் 24 வீதமாக இருக்கின்றனர். இவ்வேளை 5 ஆசனங்கள் மட்டக்களப்புக்கு உண்டு. இதில் குறைந்தது 4 ஆசனத்தையாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்ற வேண்டியது அவசியமாகும்.
கடந்த 2010ம் ஆண்டு தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 66235 வாக்குகளை பெற்று 3 ஆசனத்தையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 62009 வாக்குகள் பெற்று 1 ஆசனத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி 22935 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றது. இதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலம் மூன்று தமிழர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பான வெற்றிலைச் சின்னத்துக்கு தமிழ் மக்கள் அளித்த வாக்குகளால் ஒரு முஸ்லிம் பிரதிநிதிகளும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளால் இன்னுமொரு முஸ்லிம் பிரதிநிதியும் வந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 4227 வாக்கும் குறைந்திருந்தால் ஒரு தமிழரும், நான்கு முஸ்லிம்களும் வந்திருப்பர். இம்மாவட்டத்தில் 75 வீதம் இருக்கும் நாம் ஒரு பிரதிநிதியுடன் இருந்திருப்போம் சிந்தியுங்கள் மக்கள்.
அபிவிருத்தி, உறவுகள் என சிந்தித்து கொண்டு வெற்றிலை சின்னத்திலும், யானை சின்னத்திலும் வேட்பாளராக உள்ள தமிழர்களுக்கு தாங்கள் வழங்கும் வாக்குகள் அனைத்தும் தமிழர்களை பாராளுமன்ற பிரதிநிதியாக கொண்டு வராது என்பது கடந்த கால வரலாறுகள் காட்டுகின்றது. எனவே பேரினவாத கட்சிகளின் சின்னமான வெற்றிலை, யானை சின்னங்களில் தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் எமது தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் சிதைத்து முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தவே நடவடிக்கை எடுக்கின்றனர். இந்த உண்மையை உணர்ந்து சகல தமிழ் மக்களும் இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து எமது தமிழ் இனத்தின் இருக்கை உறுதிப்படுத்த முன்வர வேண்டும்;.
இதேபோல் தமிழர்களின் வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு செல்ல விடாது தடுத்து முஸ்லிம்களை இம்மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக உருவாக்கும் நோக்குடனேயே ஏனைய சுயேட்சை குழுக்கள், தமிழர் சார்ந்த அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு உங்கள் வாக்குகளை வழங்கி எமது தமிழினத்துக்கு துரோகம் செய்ய வேண்டாம்.
நாங்கள் தமிழர்கள் எங்களது உறவுகள் எமது உரிமையை இம்மண்ணில் பெற பல உயிர் தியாகங்களை புரிந்துள்ளனர். ஆனால் எவ்வித அழிவுகளுமின்றி எப்போதும் அரசுடன் இணைந்து வாழும் எமது முஸ்லிம் சகோதர இனத்தின் அரசியல் வாதிகள் பாராளுமன்றம் கலைக்கப்படுவதை பயன்படுத்தி தமது அமைச்சின் மூலம் ஒதுக்கிய நிதிகள், சமுர்த்தி கடன், சமுர்த்தி வீடுகளை காட்டி தமிழ்களின் வாக்குகளை சுவீகரிக்க உள்ளனர்.
இதற்கு எத்தமிழரும் இடம் கொடுக்க வேண்டாம். எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த தமிழருக்கும் கடந்த 20 வருடங்களாக முஸ்லிம்கள் வாக்களித்த வரலாறு இல்லை. அவர்கள் எப்போதும் முஸ்லிம் இனத்தவருக்கே வாக்களிப்பர். இதை எவரும் தமிழினம் புரிந்து கொண்டு முஸ்லிம் வேட்பாளர் எவரும் எமது தமிழினத்தின் பொன்னான வாக்குகளை வழங்கி எமது மண்ணில் பெரும் தியாகங்களை புரிந்த எம் தமிழ் உறவுகளுக்கு துரோகம் இழைக்க வேண்டாம் என தெரிவித்தார்.
ந.குகதர்சன்;,
வாழைச்சேனை நிருபர்,