Published On: Tuesday, July 28, 2015
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவுக்கு தமிழக அனைத்து கட்சி தலைவர்கள் இரங்கல்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவுக்கு தமிழக அனைத்து கட்சி தலைவர்கள் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:- அரசியலில் இணையாமல் விஞ்ஞான உலகையே சுற்றிவந்த அவர், அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு இந்திய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதே அவரது அறிவு, நேர்மை, உழைப்பு, நாட்டுப்பற்று ஆகியவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். தனது இறுதிநாள் வரை மிக எளிமையாக வாழ்ந்த அவர், கனவு காணுங்கள் என்ற அற்புத கருத்தோவியத்தை படைத்து இளைஞர்களின் எதிர்கால வாழ்விற்கு ஒளிவிளக்காய் திகழ்ந்தவர். அவருடைய இழப்பு இந்திய நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின்:- டாக்டர் அப்துல்கலாம் தான் மட்டும் கனவு காணாமல் இந்த நாட்டின் இளையதலைமுறையையும் சாதிக்க கனவு காணுங்கள் என்று உணர்வுகளை தட்டி எழுப்பி இருக்கிறார். இன்றைய தினம் அவருடைய மறைவு நமக்கு எல்லாம் பேரிழப்பு. அவர் நம்மிடம் இல்லை. எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளும் அதே நேரத்தில் இந்தியாவை தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று பாடுபட்ட டாக்டர் அப்துல்கலாமின் கனவுகளை நிறைவேற்றி அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை காண்போம் என்று இந்த நேரத்தில் உறுதி ஏற்றுக்கொள்வோம்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:- முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை. அன்னாரது இழப்பு அவருடைய குடும்பத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பாகும். அவருடைய இறுதிச்சடங்கு தமிழகத்திலேயே நடத்த வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:- இந்தியாவை பற்றி கனவு காண தூண்டியவர். எதிர்காலத்தின் மீது நம்பிக்கை விதைகளை விதைத்தவர். குடியரசு தலைவராக பொறுப்பு வகித்து சீரிய மரபுகளை போற்றி வளர்த்து முன்மாதிரியாக திகழ்ந்த டாக்டர் அப்துல்கலாமின் மறைவு நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:- சுடர்விட்டு எரியும் கல்வி ஒளிவிளக்கின் திரியாக என்றும் ஒளி தரும் உருவமாய் நம் நெஞ்சில் நிறைந்துவிட்டவர். இன்னொரு கலாம் இனி எப்போது இந்நாட்டுக்கு கிடைக்கப்போகிறார்? என்று மக்கள் தம் கண்ணீர் பூக்கள் மூலம் அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்:- குடியரசு தலைவர், பேராசிரியர், அறிவியலாளர் என பல முகங்களை கொண்டிருந்தாலும் தலைசிறந்த மனிதராக விளங்கியவர். அன்பு, கருணை, பாசம், அக்கறை, மனித நேயம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்தவர். அவருடைய மறைவு இந்தியாவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:- அப்துல் கலாம் இழப்பு அறிவியல் உலகம், எழுத்துலகம், மாணவர் உலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். உடலால் நம்மை பிரிந்தாலும் உணர்வாலும், சமூக பங்களிப்பிலும் நம்முடன் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:- இந்திய உலக அரங்கில் தொழில்நுட்பம் ஏவுகணை விஞ்ஞானத்தில் சிறந்து விளங்குவதற்கு அடித்தளமிட்டவர். இந்திய ஒருமைப்பாட்டிற்கும், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கி அனைத்து அரசியல் கட்சிகளின் பாராட்டினை பெற்றவர். அன்னாரது மறைவு தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு ஒரு பேரிழப்பு.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்:- அணுசக்தி துறையிலும், விண்வெளி ஆய்விலும் புகழை இமயம் அளவிற்கு உலகத்திற்கு உயர்த்தியவர் பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம். அவர் மறைந்தாலும், அவருடைய நினைவுகளும், சாதனைகளும் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இந்திய மண்ணிலும், இந்தியர்களின் இதயத்திலும் நிலைத்து நிற்கும்.
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன்:- நாட்டு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப்போடும் தீயசக்திகளிடம் இருந்து மக்களை விழிப்படைய வைத்தவர் அப்துல்கலாம். இந்தியா உன்னத நிலையை அடைய வேண்டும் என்று அரும்பாடுபட்டவர். தனது இறுதி மூச்சு வரை நாட்டை உயர்த்தும் இவரின் லட்சியத்தினை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கும் போது தனது இன்னுயிரை நீத்திருக்கிறார். அவருடைய ஆன்மா நற்கதி அடைய இந்து முன்னணி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறது.
இதேபோல், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழகம், முஸ்லிம் மக்கள் கழகம், இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.