Published On: Tuesday, July 28, 2015
இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய தொலைநோக்கு பார்வை கொண்ட விஞ்ஞானி; அப்துல்கலாம் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய தொலைநோக்கு பார்வை கொண்ட விஞ்ஞானி அவர் என்று புகழாரம் சூட்டி இருக்கிறார்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:தமிழ்நாட்டின் அன்புக்குரிய மண்ணின் மைந்தரும், மிகப்பெரிய விஞ்ஞானியும், இந்தியாவின் 11-வது ஜனாதிபதியுமான பாரத ரத்னா அப்துல் கலாம் திடீரென்று மரணம் அடைந்த தகவல் அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய மனிதராக விளங்கியவர்.ராமேசுவரத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து எளிமையான வாழ்க்கையை மேற்கொண்ட அவர், தனது இடைவிடாத முயற்சியினாலும், கடின உழைப்பாலும், அறிவாற்றலாலும் மிகவும் உயர்ந்த நிலைக்கு வந்தவர்.
இந்தியாவின் விண்வெளி துறை, ஏவுகணை, அணுசக்தி திட்டங்களில் அவர் ஆற்றிய பங்கு அனைவரும் அறிந்ததே. தொலைநோக்கு பார்வை கொண்ட விஞ்ஞானியான அவர், விண்வெளி தொழில்நுட்பத்திலும், ஆராய்ச்சியிலும் உலக அளவில் இந்தியாவை பெருமை மிக்க இடத்துக்கு கொண்டு சென்றவர். அணுசக்தி துறையில் இந்தியா சுயச்சார்பு மற்றும் உயர்ந்த நிலையை அடைய பாடுபட்டவர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் செயற்கை கோள் ஏவுகணை வாகன அபிவிருத்தி குழுவுக்கு தலைமை தாங்கியவர். அவரது தலைமையில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் ஏவுகணை அபிவிருத்தி திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்திய மக்களுக்கு குறிப்பாக குழந்தைகள், மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சிறந்த வழிகாட்டியாக விளங்கியவர். இந்திய மக்களுக்காக குறிப்பாக இளைஞர்களுக்காக எழுதுவதிலும், பேசுவதிலும் மிகுந்த மகிழ்ச்சியும், ஆர்வமும் கொண்டிருந்தார். இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாகவும், அடையாள சின்னமாகவும் விளங்கினார். தனது இனிய பண்பாலும், கருணையாலும், எளிமையாலும், அனைவரையும் கவர்ந்தவர். எல்லாவற்றையும் விட நாட்டின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட உண்மையான தேசபக்தர் அவர். தொழில்நுட்ப வளர்ச்சியை கிராமப்புற ஏழை மக்களின் நலனுக்காக எந்தெந்த வழிகளில் பயன்படுத்தலாம் என்று எப்போதும் சிந்தித்தவர்.அவரது மறைவுக்கு தமிழக மக்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவருடனும் சேர்ந்து என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மறைவுக்கு தமிழக கவர்னர் கே.ரோசய்யா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் திடீர் மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மக்களின் ஜனாதிபதியாக விளங்கிய அவர், வளர்ச்சியையும், உத்வேகத்தையும் நோக்கி இளைஞர் சமுதாயத்தை செல்ல வைத்தவர். இந்த நாடு ஒரு சிறந்த மனிதர், தலைவர், தலைசிறந்த விஞ்ஞானி, எளிமையும், பண்பும் மிகுந்த ஒரு நல்லவரை இழந்துவிட்டது.
சென்னையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு அவர் அடிக்கடி வருகை தந்துள்ளார். அவரை நான் வரவேற்றும் உள்ளேன். அவரது சிறந்த பண்பும், அன்பும் அவருடன் என்னை மிகவும் நெருக்கமாக ஆக்கியது.அவரது மறைவு தமிழ்நாடு, இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இளைஞர் மற்றும் மாணவ சமுதாயத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. அவரது மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.