Published On: Tuesday, July 28, 2015
கல்முனை தொகுதி மக்கள் முஸ்லிம்களின் அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியுடையவர்கள் - வேட்பாளர் சட்டத்தரணி ஹரீஸ்

கல்முனை தொகுதி மக்கள் முஸ்லிம்களின் அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியுடையவர்கள். முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் அரசியல் தலைமைகளை உருவாக்கியவர்கள். இம்மக்கள் கட்சியின் கொள்கையோடும் கட்சியோடும் வாழ்பவர்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று இரவு சாய்ந்தமருது சீபிறீஸ் ரெஸ்டோரண்ட்டில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சாய்ந்தமருது மக்கள் இரத்தம் சிந்தியும்,தாய்மார்களின் துஆக்களினாலும் வளர்த்தெடுத்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை இன்று பதவி மோகம் பிடித்தவர்கள் அழிக்க முற்படுவதனை இம்மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
சாய்ந்தமருது மண் முஸ்லிம் காங்கிரஸின் அச்சாணியாகும். இதனை கருத்திற்கொண்டு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இம்மண்ணுக்கு கட்சியின் மூலம் தேசியல் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை சகோதரர் நிஜாமுதீனுக்கு வழங்கியதோடு அவருக்கு பிரதியமைச்சர் பதவியினை பெற்றுக்கொடுத்தார். இவ்வாறு சாய்ந்தமருது மண்னை கட்சித் தலைமை கௌரவப்படுத்தியுள்ளது. இன்று எமது கட்சியின் மூலம் அரசியல் முகவரி பெற்றுக்கொண்டு பதவி மோகம் பிடித்தவர்கள் கட்சியும் கட்சித் தலைமையும் இம்மண்ணுக்கு எதனையும் செய்யவில்லை என பொய்யான பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியினால் அரசியல் அந்தஸ்தைப் பெற்றவர்கள் தங்களது பதவிகளை அடைந்து கொள்வதற்காக இன்று எமது பிரதேசங்களுக்கு எதுவுமே செய்யாத உதிரிக் கட்சிகளைக் கொண்டு வந்து மக்களை ஏமாற்றுகின்றனர்.
கல்முனை தொகுதி மக்கள் முஸ்லிம்களின் அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியுடையவர்கள். முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் அரசியல் தலைமைகளை உருவாக்கியவர்கள். இம்மக்கள் கட்சியின் கொள்கையோடும் கட்சியோடும் வாழ்பவர்கள் என்பதை இத்தேர்தல் மூலம் இவர்களுக்கு உணர்த்துவார்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை.
எமது பிரதேசங்களின் அபிவிருத்திகளை நாமே செய்துள்ளோம், எமது இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை நாமே வழங்கியுள்ளோம். எமது மக்களின் கஷ்ட, நஷ்டங்களில் நாமே பங்கெடுத்துள்ளோம். எமது மக்களின் உரிமைக்காக நாமே குரல் கொடுத்துள்ளோம். மாமனிதர் அஷ்ரஃபின் தலைமையின் கீழ் அரசியல் கற்றவர்கள் நாம். சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்தியே நாம் என்றும் செயற்படுகின்றோம்.
எமது பிரதேசத்தில் இன்று பிரதேச வாதத்தை தூண்டிவிட்டு அதனை மூலதனமாகக் கொண்டு தங்களது கட்சிக்கு வாக்குகளை சேகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் கல்முனை தொகுதியின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் ஒரு செயற்பாட்டினையும் இவர்கள் முன்னெடுத்துள்ளனர். இதற்கு கட்சிப் போராளிகளும், மக்களும் இடம்கொடுக்கக் போவதில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
சாய்ந்தமருது மக்களினதும், இளைஞர்களினதும் அபிலாசைகளையும், தேவைகளையும் கட்சித் தலைமையும், நாங்களும் இணைந்து நிறைவேற்றியிருக்கின்றோம். எதிர்காலத்திலும் நிறைவேற்றுவோம்.
(ஹாசிப் யாஸீன்)