Published On: Wednesday, July 29, 2015
மட்டக்களப்பு – ஏறாவூர் நகரில் இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதிக்கொண்டன

மட்டக்களப்பு – ஏறாவூர் நகரில் இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதிக்கொண்டதில் வயோதிப் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளதுடன் நான்கு பேர் காணமடைந்துள்ளனர்.
ஏறாவூர் புன்னக்குடாவீதியில் 28.07.2015 அதிகாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூரைச் சேர்ந்த 70 வயதுடைய சின்னமரைக்கார் மரியம்பீவி என்பவரே இச்சம்பத்தில் உயிரிழந்தவர்.
முச்சக்கர வண்டியின் சாரதியொருவர் உட்பட நான்கு பேர் காணமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து வந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒருவழிப்பாதையில் சென்ற முச்சக்கர வண்டியை அதேவழியில் வந்த இன்னுமொரு முச்சக்கர வண்டி இடதுபுறமாக முந்திச் செல்லமுட்பட்டபோது இரண்டு முச்சக்கர வண்டியும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து ஒரு முச்சக்கரவண்டி வீதியின் நடு எல்லையில் வைக்கப்பட்டுள்ள பூச் சாடியை உடைத்துக்கொண்டு வீதியின் மறுபுறத்தில் புரண்டு விழுந்துள்ளது. அதிகவேகமே இவ்விபத்திற்குக் காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அந்த முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ளபோதிலும் கைதுசெய்யப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குருநாகலிலுள்ள தமது குடும்ப உறவினர்களைச் சந்தித்துவிட்டுத் திரும்பும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட பிரதம வேட்பாளர் அலி ஸாஹிர் மௌலானா சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டார்
மரணமடைந்தவர் ஏறாவூர் உள்ளுராட்சி மன்றத்தின் முன்னாள் தவிசாளர் ஏ.நாஸரின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
(ஏறாவூர் நிருபர் ஏஎம்றிகாஸ்)