Published On: Wednesday, July 29, 2015
பழகுவதற்கு அன்பானவராகவும், எளிமையான வாழ்க்கையைக் கடைப்பிடிப்பவராகவும் இருந்தார் கலாம் குடியரசுத் தலைவர் மாளிகை பணியாளர்களின் அனுபவங்கள்

பழகுவதற்கு அன்பானவராகவும், எளிமையான வாழ்க்கையைக் கடைப்பிடிப்பவராகவும் இருந்தார் கலாம் என்று, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்த நாட்களை அங்கு பணியாற்றும் பணியாளர்கள் நினைவு கூர்ந்தனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றுபவர்கள் கூட, குடியரசுத் தலைவரைச் சந்திக்க வேண்டும் என்றால், அதற்கு நிறைய விதிகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால் கலாம் வித்தியாசமானவராக இருந்தார்.அந்த மாளிகையில் சுமார் 18 ஆண்டுகளாகப் பணியாற்றும் ஜே.கே.ஷா கூறும்போது, "பொதுவாக தொலைபேசியில் யாருடனாவது குடியரசுத் தலைவர் உரையாட வேண்டுமென்றால், அவரின் செயலாளர்கள் எங்களை அழைத்து, குறிப்பிட்ட எண்ணுக்கு தொடர்பு கொடுக்கச் சொல்வார்கள்.
ஆனால் ஒருமுறை அப்துல் கலாம் நேரடியாக என்னிடம் பேசி ஓர் இணைப்பை ஏற்படுத்தச் சொன்னார். ஆனால் அவர் அழைத்த நபர் யாரென்று எனக்குச் சரியாகப் புலப்படவில்லை. மீண்டும் அவரை அழைத்துக் கேட்க எனக்குத் தயக்கமாக இருந்தது. எனவே, அவரின் செயலாளரை அழைத்தேன்.
மீண்டும் என்னை தொலைபேசியில் அழைத்த கலாம், “நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லை என்றால் நீங்கள் தயங்காமல் என்னை மீண்டும் அழைத்துக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்” என்றார். தனக்கும் அந்த மாளிகையில் பணியாற்றுபவர்களுக்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் கடைப்பிடிக்காமல் கலாம் வாழ்ந்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னைச் சந்திக்க குழந்தைகள் யாராவது காத்திருந்தால், எத்தனை தாமதமானாலும் அவர்களைச் சந்தித்துவிட்டுத்தான் மற்ற பணிகளை கலாம் பார்ப்பார்" என்று கூறினார்.
அங்கு பணியாற்றும் மற்றொரு பணியாளரான டி.கே.சாஹு கூறும்போது, "குடியரசுத் தலைவர் மாளிகையில் ஐந்து ஆண்டுகள் கலாம் தங்கியிருந்தபோது ஒரே ஒரு முறை மட்டும்தான் அவரின் குடும்பத்தினர் அங்கு வருகை தந்தனர்" என்றார்.அங்கு பணியாற்றும் சமையல்காரரான சலீம் அகமது கூறும்போது, "அவருக்கு தென்னிந்திய உணவுகள் மிகவும் விருப்ப மானதாக இருந்தன. எனினும், ஒருபோதும் குறிப்பிட்ட உணவு வகையைச் செய்யச் சொல்லி கேட்டதில்லை. அவர் ஒருபோதும் உணவை குறை சொன்னதில்லை" என்றார்.
(திருச்சி - சாகுல் ஹமீது)