Published On: Tuesday, January 19, 2016
பொதுமக்களின் குறைகளை 24 மணி நேரமும் செயல்படும் '1100' குறைதீர் சேவையை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா
பொதுமக்களின் குறைகளை விரைவில் களைந்திட 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மூலம் தொடர்பு கொள்ளும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள குறைதீர் சேவையை, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
ஏழை எளிய மக்களும், சாமானியர்களும் அரசிற்கு தங்கள் குறைகளைத்தெரிவித்து உரிய தீர்வு பெறும் நோக்கில் முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவின் மூலம் நேரடியாகவும், அஞ்சல் வழியாகவும், முதலமைச்சரின் தனிப் பிரிவின் வலைதளம் மூலமாகவும் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் குறைகளை விரைந்து பெற்று, அதனைக் களைந்திடும் நோக்கில் கணினிவழி தொலைபேசி அழைப்பு ஒருங்கிணைத்தல் (Computer Telephony Integration), குரல் பதிவு மற்றும் பிரித்தறிதல் (Voice Logger System) போன்ற புதிய தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி (Toll Free) எண் 1100 மூலம் எங்கிருந்தும், எப்போதும் பொது மக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 'அம்மா அழைப்பு மையம்' அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15,000 அழைப்புகளை ஏற்கும் வகையில், 138 அழைப்பு ஏற்பாளர்களுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கேற்ப அழைப்பு ஏற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் இந்த வசதியை தொடக்கிவைத்தார்கள்.
பொதுமக்களிடமிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் விவரம், குறைகள் ஆகியவை கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி (SMS) வாயிலாக அனுப்பி வைக்கப்படும். அதுமட்டுமின்றி, எந்ததுறையின், எந்தஅதிகாரிக்கு அவரது குறைகள் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரம் அழைத்தவருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். மேலும், அவரது குறை குறித்து சம்பந்தப்பட்ட துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரமும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுத் துறை முதன்மைச் செயலாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
(திருச்சி - சாஹுல் ஹமீட்)
