Published On: Thursday, January 14, 2016
நாட்டின் முக்கியத் தலமாக சோம்நாத் கோயில் உருவாக வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்
குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோயில் நாட்டின் முக்கியத் தலமாக உருவாக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான சோம்நாத் சிவன் கோயில் குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மிகப் பழமையான இந்த கோயில் அண்மையில் புனரமைக்கப்பட்டது. இக்கோயில் அறக்கட்டளை தலைவராக குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேஷுபாய் படேல் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் பாஜக மூத்த தலைவர் அத்வானி உட்பட பலர் முக்கிய அறங்காவலர்களாக உள்ளனர்.
இந்நிலையில் கோயில் அறக்கட்டளை தலைவர் கேஷுபாய் படேல் தலைமையில் அறங்காவலர்கள் குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அறங்காவலர்கள் குழுவில் உள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது சோம்நாத் கோயிலை நாட்டின் முக்கிய தலமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலை முக்கிய வழிபாட்டுத் தலமாக உருவாக்கும்படி பிரதமர் வலியுறுத்தினார். மேலும் சுற்று லாவை வளப்படுத்தும் நோக்கில் சோம்நாத் கோயிலுடன் டையூ மற்றும் கிர் காடுகளில் சிங்கத்தை பார்வையிடுவது ஆகியவற்றை இணைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். கோயில் வளாகத்தில் கலாச்சார மையம், அரங்கு மற்றும் அருங்காட்சியக கட்டிடம் எழுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று நடந்த கூட்டத்தில் சோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேஷுபாய் படேல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அறங்காவலர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த பிரசன்வதன் மேத்தா உயிரிழந்ததை தொடர்ந்து, அவருக்கு பதிலாக பாஜக தலைவர் அமித்ஷா நியமிக்கப்பட்டார்.
