Published On: Sunday, January 10, 2016
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் தீ
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் 09.01.2016 அன்று பிற்பகல் 12.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 16 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 16 குடும்பங்களை சேர்ந்த 80க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகமாக ஆலய மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கிரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது.
பெருமளவிலான வீட்டு உபகரணங்கள் பெறுமதியான ஆவணங்கள் சிறிது சிறிதாக சேகரித்த தங்க நகைகள் பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)






