Published On: Monday, January 18, 2016
கல்முனை கல்வி வலயத்தில் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு
2015 ஆம் ஆண்டு கல்முனை கல்வி வலயத்தில் தேசிய மற்றும் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் திறமை காட்டி சாதனை படைத்த மாணவ வீர வீராங்கணைகளையும், விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலையின் நல்லதம்பி கூட்ட மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (18) இடம்பெற்றது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் ரொபின் அவர்களின் செயலாளர் பீ.விநாயகமூர்த்தி, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த கல்முனை வலய பாடசாலைகளின் 230 மாணவர்களும், ஆசிரியர்களுக்கும் அதிதிகளினால் பதக்கம் அணிவித்து, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் வெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் வீ.பிரபாகரனினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
(ஹாசிப் யாஸீன்)