Published On: Tuesday, July 12, 2016
றிசாத், ஹகீம், தயாவின் கோரிக்கையை நிதியமைச்சர் ஏற்பு
அம்பாறை
மாவட்டத்தில் உள்ள கரும்பு உற்பத்தியாளர்களும், நெசவுத்தொழிலில் ஈடுபடுவோரும்
எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் வகையில் அவர்களை, நிதி அமைச்சர்
ரவி கருணாநாயக்க எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அமைச்சரவையின்
உபகுழுக் கூட்டம் இன்று காலை (12/07/2016) நடைபெற்றபோது
அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ரவூப் ஹகீம், தயாகமகே ஆகியோரின் வேண்டுகோளை ஏற்றே,
இந்த சந்திப்பை அவர் நடத்தவுள்ளார். இந்த மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட
உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை அமைச்சர்கள், நிதி அமைச்சர் ரவியிடம்
எடுத்துரைத்தனர்.
வெளிநாடுகளில்
இருந்து நெசவுப்புடவைகள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள்
பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் அவர்கள் பாரம்பரியமாகச் செய்யும் இந்தத்
தொழிலை கைவிடும் ஆபத்து நிலவுவதாகவும் அமைச்சர் றிசாத் இங்கு சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கரும்புத் தொழிலில் ஈடுபடுவோர் யானைகளின் தொல்லைக்கு பெரிதும்
ஆளாகுவதாகவும், இதனால் கரும்புத் தொழிலில் பாரிய பாதிப்பு ஏற்படுவதையும் அமைச்சர்
றிசாத் சுட்டிக்காட்டியதுடன், கரும்புத் தொழிற்சாலைகளை முன்னேற்றுவதன் மூலம், சீனி
உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.