Published On: Wednesday, March 27, 2013
அத்வானியை கொல்ல முயன்ற வழக்கு: ஏப். 9 வரை மூவருக்கு காவல்

பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான அத்வானி கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுரையில் இருந்து தென்காசி செல்ல இருந்தார். அப்போது அவரது பயணப்பாதையை போலீசார் சோதனை செய்த போது திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பாலத்தின் அடியில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அத்வானி செல்லும் போது வெடிகுண்டை வெடிக்க செய்ய திட்டமிட்டிருந்த முயற்சியை சரியான நேரத்தில் போலீசார் தடுத்துவிட்டனர். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான போலீஸ் பக்ருதீன் உள்பட சிலரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மத்திய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தியதில் இந்த வழக்கில் போலீஸ் பக்ருதீன் அண்ணன் நெல்பேட்டை தர்வீஸ் மைதீன், வில்லாபுரம் சையது சகாபுதீன், முஸ்தபா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும், மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் 3 பேர்களையும் ஏப்ரல் 9-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அதன் பேரில் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் 3 பேரையும் திருமங்கலம் கோர்ட்டிற்கு கொண்டு வந்ததும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 3 பேரும் நிருபர்களை பார்த்து நாங்கள் அப்பாவிகள், இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். 3 பேரின் உறவினர்கள் கோர்ட்டுக்கு வந்து 3 பேரையும் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
(சென்னையிலிருந்து சாஹுல்)