Published On: Wednesday, March 27, 2013
கர்நாடக சட்டசபைத் தேர்தல்: ஐ.பி.எல். போட்டி அட்டவணையில் மாற்றம்

இந்தியாவில் ஐ.பி.எல்.-6 கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கி மே 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கர்நாடகத்தில் உள்ள பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பங்கேற்கும் லீக் ஆட்டங்கள், பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. மே 4-ம் தேதி பெங்களூர் அணி பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.
கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே 5-ம் தேதி நடைபெற இருப்பதால், தங்களால் போட்டிக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க இயலாது, எனவே போட்டியை மற்றொரு தேதிக்கு தள்ளிப்போட வேண்டும் என ஐ.பி.எல். மற்றும் பி.சி.சி.ஐ. அதிகாரிகளை பெங்களூர் நகரின் காவல்துறை ஆணையர் கேட்டுக்கொண்டார்.
இதனை பரிசீலனை செய்த ஐ.பி.எல். நிர்வாகம், தேர்தலையொட்டி நடைபெற உள்ள பெங்களூர் அணிக்கான போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றியமைத்துள்ளது. அதன்படி மே 4-ம் தேதி நடைபெற இருந்த, ராயல் சேலஞ்சர்ஸ்-கிங்ஸ் லெவன் அணிகளுக்கிடையிலான போட்டி, மே 14-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மே 6-ம் தேதி நடைபெற இருந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் முன்கூட்டியே அதாவது ஏப்ரல் 9-ம் தேதியே நடத்தப்படுகிறது.
இதேபோல் பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கிடையிலான ஆட்டம் ஏப்ரல் 23-ம் தேதி மொகாலியில் நடைபெறுவதாக இருந்தது. அந்தப் போட்டி தர்மசாலாவில் மே 16-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மசாலாவில் மே 16-ம் தேதி பஞ்சாப்-பெங்களூர் அணிகள் மோதும் ஆட்டம், மே 6-ம் தேதி மொகாலி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
டெல்லியில் மே 13-ம் தேதி நடைபெற இருந்த டெல்லி-பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டி, ஏப்ரல் 23-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மே 4-ம் தேதி ஐதராபாத்தில் 4 மணிக்கு தொடங்க இருந்த போட்டி (சன்ரைசர்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ்) இரவு 8 மணிக்கு தொடங்கும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-புனே வாரியர்ஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டம் மே 14-ம் தேதியில் (ராஞ்சி) இருந்து மே 15-ம் தேதிக்கு மாற்றப்படுகிறது. மே 16-ல் தர்மசாலாவில் நடக்க இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி அணிகளுக்கிடையிலான ஆட்டம் முன்கூட்டியே, அதாவது மே 14-ம் தேதி நடத்தப்படுகிறது.
மே 19-ம் தேதி பெங்களூரில் மாலை 4 மணிக்கு நடைபெறுவதாக இருந்த பெங்களூர்-சென்னை ஆட்டம் மே 18-ம் தேதி 8 மணிக்கு நடைபெறும். புனே வாரியர்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் லீக் ஆட்டம் மே 18-ம் தேதியில் (இரவு 8 மணி) இருந்து மே 19-ம் தேதிக்கு (மாலை 4 மணி) மாற்றப்பட்டுள்ளது.
(சென்னையிலிருந்து சாஹுல்)