Published On: Wednesday, March 27, 2013
இலங்கைக்கு சர்வதேச விசாரணை, பொருளாதார தடை: தமிழக சட்டசபை

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இலங்கையை, இந்தியா நட்பு நாடு என்று கூறி வருவதையும் நிறுத்த வேண்டும் என்றும் இன்றைய தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
இன்று மாணவர்கள் போராட்டம் தொடர்பாக தி.மு.க. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இது குறித்த விவாதத்தில் காரசார மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து தி.மு.க., வெளியேறியது. தொடர்ந்து இலங்கை தொடர்பான ஒரு தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா முன்மொழியப்பட்டது.
இந்த தீர்மானம் கொண்டு வரப்படும் முன்னதாக முதல்வர் ஜெ., பேசுகையில்; இலங்கை தமிழர்கள் அழிய மறைமுக காரணமாக இருந்தது தி.மு.க.தான். ஆனால் மகள் கனிமொழி தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பி பரிசு பொருட்கள் பெற்று வந்தனர். இவர்களுக்கு விமான நிலையத்தில் கருணாநிதி வரவேற்பும் அளித்தார். இலங்கை விவகாரத்தில் தி.மு.க., இரட்டைவேடம் போட்டு வருகிறது. தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார் கருணாநிதி.
எனது தலைமையிலான அரசு இலங்கைவாழ் மக்களுக்கு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கடந்த முறை கொண்டு வந்த தீர்மானத்தை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை. இதன் காரணமாக இன்று மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. யாருக்கும் தாழாமல், தாழ்த்தப்படாமல், சுரண்டப்படாமல், அடிமையாக இல்லாமல் வாழ வேண்டும் என்பதை அண்ணாத்துரையின் பொன்மொழிகள் ஆகும்.
இதன்படி இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்திதர போதிய மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழருக்கு தொடர்ந்து இன்னல் தரும் இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை இந்தியா நிறுத்தி கொள்ள வேண்டும். போர்க்குற்றம் புரிந்தவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட வேண்டும். தமிழர் மீதான தடையை நீக்கும் வரை இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். தனி ஈழம் குறித்து இலங்கையில் மற்ற பகுதியில் வாழும் தமிழர்கள் கொண்டு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் முன்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் இவ்வாறு தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் விவரம் வருமாறு; தமிழன் யாருக்கும் தாழாமல் யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எசமானனாக இல்லாமல் உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாய கொள்கை என்றார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணா பொன்மொழிக்கேற்ப, இலங்கை வாழ் தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இலங்கை நாட்டை “நட்பு நாடு” என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இலங்கை போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும் இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும் தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும் ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தனி ஈழம் குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானத்தினை சட்டசபை ஒரு மனதாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். இதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.
(சென்னையிலிருந்து சாஹுல்)