Published On: Wednesday, March 27, 2013
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஹலால் சான்றிதழ் வழங்குமா?

ஹலால் சான்றிதழ் வழங்கும் உரிமையை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கு வழங்குவதென சிரேஷ்ட அமைச்சர் ரத்தினசிறி விக்கிரம நாயக்க தலைமையிலான அமைச்சர் உப குழு தீர்மானித்துள்ளது. இத்தீர்மானத்தினை இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என சிரேஷ்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசில் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்களும் இந்த உப குழுவில் அங்கத்துவம் வகிக்கின்றனர். இக்குழு 4 முறைக்கு மேல் ஒன்று கூடி முஸ்லிம் அமைச்சர்கள், வியாபாரிகள், ஐம்மியத்துல் உலமா மற்றும் பௌத்தமத தலைவர்களை அழைத்து சிரேஷ்ட அமைச்சர் ரத்சினசிரி விக்கிரம நாயக்க பேச்சுவார்த்தை நடாத்தினார்.
முஸ்லிம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு அத்திவசியமாக ஹலால் சான்றிதழ் பெற்ற பின்பே ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ளது. இலங்கையில் வரும் முஸ்லிம் நாடுகளின் உல்லாசப் பிரயாணிகள் ஹலாலான ஹோட்டல்களையும் உணவு வகைகளையுமே வேண்டுகின்றனர்.
அத்துடன் சவூதி அரேபியா, மாலைதீவு, துபாய், கட்டார், குவைட் போற்ற நாடுகளில் 7 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தொழில் செய்கின்றனர். அவர்கள் தமக்குத் தேவையான உணவு மருந்துகளையும் ஹலால் பொறித்து இருந்தால்தான் அவர்களது பொருட்கள் அந்த நாட்டில் விமான நிலையத்தில் இருந்து விடுவிக்கப்படும் என சிங்கள நாளிதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அஷ்ரப் ஏ. சமத்)