Published On: Tuesday, March 26, 2013
முஸ்லிம்களின் ஹர்த்தாலின் போது டயர்களை எரித்த இருவருக்கு விளக்கமறியல்

நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஹர்த்தாலின்போது வீதியில் டயர் வைத்து எரித்து அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி இருவரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டார். நேற்று மாலை குறித்த நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
முஸ்லிம்களின் ஹலால் மற்றும் அவர்களது மதத்தை இழிவுபடுத்தும் பொதுபல சேனா போன்ற தீய சக்திகளை எதிர்த்து நேற்று நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு ஒருங்கிணைந்த இஸ்லாமியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது.
இதன்படி அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி பிஸ்கால் சந்தியில் நேற்று திங்கட்கிழமை காலை 6 மணியளவில் டயர்கள் போட்டு எரித்து பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவரை இராணுவத்தினர் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இருவரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நேற்று பகல் 12 மணியளவில் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று பஸ் சாலைக்கு சொந்தமான பஸ் மீது கல்வீச்சு நடாத்திய பஸ்ஸின் கண்ணாடிகளை சேதப்படுத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு ஆசிரியரையும், ஒரு மாணவரையும் இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.பைஷல் இஸ்மாயில்)