Published On: Tuesday, March 26, 2013
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் ஓடாது

ஆம்னி பஸ்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் அதிகரிக்கப்பட இருப்பதால், இதனை கண்டித்து ஏப்ரல் 1–ந்தேதி முதல் தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் ஓடாது என்று ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் கூறினர்.
தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏ.அப்சல், சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:–வெளிமாநிலங்களுக்கு செல்லும் லாரிகளுக்கு ‘‘ஒன் இன்டியா, ஒன் பெர்மிட்’’ என்ற முறை உள்ளது. ஆனால் ஆம்னி பஸ்களுக்கு அவ்வாறு வழங்குவதில்லை, இதனால் ஆம்னி பஸ்களுக்கு பெர்மிட் கட்டணம் அதிகம் செலுத்த வேண்டியுள்ளது.
அதேபோல் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக 500 கிலோ மீட்டர் செல்வதாக இருந்தால் ஆயிரம் ரூபாய் வரை சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. 3–வது நபர் இன்சூரன்ஸ் கட்டணமும் 107 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை அதிகரிப்பு ஏப்ரல் 1–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. டீசல் கட்டணமும் மாதம் தோறும் அதிகரிக்கப்படுவதால், கட்டணத்தை மாதம் தோறும் அதிகரிக்க முடிவதில்லை. எனவே 6 மாதத்திற்கு ஒரு முறை கட்டணத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் (ஏ.ஐ.எம்.டி.சி) அமைப்பினர் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசும் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறி வருகிறது. இதில் உடன்பாடு ஏற்படவில்லையென்றால், ஏப்ரல் 1–ந் தேதியிலிருந்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகளும், 40 லட்சம் பஸ்களும், 25 லட்சம் சுற்றுலா டூரிஸ்டு கார்கள் உரிமையாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் இந்த வாகனங்கள் இயக்கம் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஒரு லட்சம் டூரிஸ்ட்டு கார்கள், ஆயிரம் ஆம்னி பஸ்கள் மற்றும் லாரிகளும் நிறுத்தப்படுகின்றன.இதுகுறித்து மாநில அரசுக்கும் தங்கள் கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக கடிதம் கொடுக்க உள்ளோம் என்று அவர் கூறினார்.
உடன் சென்னை டூரிஸ்ட்டு கார் உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.பி.பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் சீனிவாசன் உட்பட பலர் இருந்தனர்.
(சென்னையிலிருந்து சாஹுல்)