Published On: Wednesday, March 20, 2013
தண்ணீரை வாசிப்போம்

கடவுள் எழுதிய
கவிதைப் புத்தகம் தண்ணீர்
புத்தகத்தின்
அணிந்துரையை கடல் எழுத
ஆசியுரையை நீர்வீழ்ச்சிகள்
நிரப்பியுள்ளன
நதி
ஆறு
குளம்
குட்டை என்று
புத்தகத்தின் பொருளடக்கம் விரிகிறது
நிலமென்னும் வாசிகசாலையில்
இந்நூல் இல்லாது போனால்
மேகத்திடம் இரவல் வாங்கி
பயிர்கள் தினமும் இதை படிக்கின்றன
இலவசமாக
இது கிடைப்பதால்
மனிதர்கள்
தண்ணீரை சரியாக வாசிப்பதில்லை
சிலநேரங்களில் கிழித்து எறிகின்றார்கள்.
சிலநேரங்களில் விரித்துவைத்துவிட்டு உறங்கிவிடுகிறார்கள்
கிணற்றுக்குள் மரபுக்கவிதையாய்
இருந்த தண்ணீர்
குழாய் கிணற்றில் புதுக்கவிதையாகின
பின்பு போத்தலில் அடைக்கப்பட்டு
பின்நவீனமாய் மாறிவிட்டது
ஆபிரிக்கா கண்டத்தில்
ஒரு பக்கமாவது
படிக்க கிடைக்காத என்று
மக்கள் பரிதவிக்க
எம்மவர்கள் அதன் கவித்துவத்தை கண்டுகொள்ளுவதாய் தெரியவில்லை
அதில் காறி உமிழ்கின்றார்கள்
இது இப்படியே போனால்
நாளை எந்த நேரமும்
எதுவும் நடக்கலாம்
எதிர்காலத்தில்
தங்கத்தை கொடுத்து தண்ணீர்
வாங்க வேண்டிவரலாம்
மூன்றாம் உலகப் போர்
பெற்றோலுக்காய் நடந்தால்
நான்காம் உலகப்போர்
தண்ணீருக்காய் நடக்கலாம்
தண்ணீர் வாங்க
செவ்வாய் கிரகம் சென்ற மனிதன்
முண்டியடித்து
மூக்கையுடைத்துக்கொள்ளலாம்
அரசாங்கத்தால்
சம்பளத்துக்கு பதிலாய்
ஆளுக்கொரு போத்தல்
தண்ணீர் வழங்கப்படலாம்
ஒருபோத்தல் தண்ணீர்
வைத்துள்ளவனுக்கே
திருமணம் நடக்கலாம்
நாளை எந்த நேரமும்
எதுவும் நடக்கலாம்...
தண்ணீருக்காய் நாம் கொல்லப்படலாம்.
கவிஞர் பொத்துவில் அஸ்மின்