Published On: Wednesday, March 20, 2013
நவநீதம்பிள்ளையின் கொடும்பாவி எரித்து இலங்கைக்கு ஆதரவாக யாழில் பேரணி
இலங்கைக்கு எதிராக ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பேரணியொன்று இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் அருகே இருந்து பொதுமக்கள், அரசியல் கட்சிகள் பங்குபற்றலுடன் ஆரம்பமானது.
இப்பேரணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து, இப்பேரணி காலை 10 மணிமுதல் 12 மணிவரை நீடீத்தது. இதன்போது பேரணியில் கலந்து கொண்ட மக்கள் ஐ.நா. மனித உரிமை பணியகம், மற்றும் நவநீதம்பிள்ளைக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
முனீஸ்வரன் ஆலயப்பகுதியில் இருந்து ஆரம்பமான இப்பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் பதாதைகளைத் தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் முனீஸ்வரன் அங்காடியூடாக மத்திய பேரூந்து நிலையம் - மின்சார நிலைய வீதி, கஸ்தூரியார் வீதி வழியாக மீண்டும் யாழ். மத்திய பேரூந்து நிலையத்தை சென்றடைந்தனர்.
தொடர்ந்து, மத்திய பேரூந்து நிலையப்பகுதியில் வைத்து ஐ.நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கொடும்பாவி பொதுமக்களால் எரியூட்டப்பட்டது. யாழ் குடாநாட்டின் அனைத்து பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்களும், சகோதர மொழி பேசும் மக்களும் பெருந்திரளாக இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.அங்கஜன் மற்றும் அவரது செயலாளர் இராமநாதன், ஈ.பி.டி.பி. யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்தரன் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
(பா.சிகான்)