Published On: Thursday, March 21, 2013
கர்நாடக சட்டசபைக்கு மே 5ஆம் தேதி தேர்தல்: தலைமை கமிஷனர்

கர்நாடக சட்டபைக்கு ஒரே கட்டமாக மே 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் தற்போது பா.ஜ., ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டார் உள்ளார். பா.ஜ.,வின் பதவிக்காலம் ஜூன் 3ம் தேதி முடிவடைகிறது.
இதனையடுத்து மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அங்கு பா.ஜ., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சிக்கு இடையே கடும் போட்டியாக உள்ளது.
இதுதொடர்பாக ஏற்கனவே அனைத்துக் கட்சி தலைவர்களுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் புதன்கிழமை உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங்குடன் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத், தேர்தல் ஆணையர்கள் பிரம்மா, சாய்தி மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பா.ஜ.,வுக்கு 110 உறுப்பினர்கள் பலம் உள்ளது. காங்கிரசுக்கு 80 உறுப்பினர்கள் பலம் உள்ளது.
இந்நிலையில், கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை டில்லியில் தலைமை கமிஷனர் சம்பத் அறிவித்தார். இது குறித்து சம்பத் கூறுகையில், கர்நாடகத்தில் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்படும். தேர்தல் பணிகளும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு ஏப்ரல் 10ம் தேதி அறிவிக்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாள் ஏப்ரல் 17ம் தேதி. வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் 18ம்தேதி நடைபெறும். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 20ம் தேதி. தேர்தல் ஒரே கட்டமாக மே 5ம்தேதி நடைபெறும். தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் 8ம் தேதி எண்ணப்படும். தேர்தல் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என கூறினார்.
(தமிழகத்திலிருந்து ஹமீது)