Published On: Thursday, March 14, 2013
மட்டக்களப்பு சிறைச்சாலையை அகற்றுவதற்கு பிரதியமைச்சர் தீர்மானம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை விஸ்தரிக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள சிறைச்சாலையை இங்கிருந்து அகற்றும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.
அண்மையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற அவசர மற்றும் விபத்துச் சேவைப் பிரிவை ஆரம்பிக்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றி பிரதியமைச்சர் முரளீதரன் மட்டக்களப்பு சிறைச்சாலையை அது தற்போது அமைந்திருக்கும் இடத்திலிருந்து அகற்றி அந்த இடத்தை மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையை விஸ்தரிப்பதற்காக வழங்கும் ஆலோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இது விடமயாகப் தான் சிறைச்சாலைகள் அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாகவும், தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் மட்டக்களப்பு சிறைச்சாலை அமைந்துள்ளது. இதனை இங்கிருந்து அகற்றி மாந்தீவுக்குக் கொண்டு போவது பற்றி ஏற்கெனவே பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. மாந்தீவுதான் சிறைச்சாலைக்குப் பொருத்தமான இடம் என்றும் பிரதியமைச்சர் முரளீதரன் சொன்னார்.
மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய வேண்டும். ஆனால் அதற்கு வேறு காணிகள் இல்லை. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் இருக்கும் ஒரேயொரு அரச காணி மட்டக்களப்பு சிறைச்சாலை அமைந்துள்ள வளாகம்தான். எனவே அதனை இடம் மாற்றினால் மட்டக்களப்பு வைத்தியசாலை விரிவாக்கம் பெறும். அதேவேளை சிறைச்சாலை இல்லாத நகரமாகவும் மட்டக்களப்பு நகரம் இருக்கும் என்றார்.
இதேவேளை இவ்வருட இறுதிவாக்கில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்று நோய் சிகிச்சைப் பிரிவு இயங்க ஆரம்பித்து விடும் என்றும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நம்பிக்கை தெரிவித்தார்.
(குகதர்சன்)