Published On: Sunday, March 31, 2013
முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை கண்டித்து சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவர்

சிங்கள குழுவொன்றினால் நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நிறுத்தக்கோரி அரசாங்கத்துக்கு எதிராக பெரும்திரளான சிங்கள மக்கள் மிக விரைவில் திரண்டெழுவதனை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
கல்முனை அல்மிஸ்பாஹ் விளையாட்டுக்கழகம் அண்மையில் நடத்திய வலைப்பந்தாட்ட விளையாட்டு போட்டியின் இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்
அவர் மேலும் கூறுகையில்; இன்று நாட்டின் பல பகுதிகளிலும் இன மத பிரதேச வேறுபாடின்றி அபிவிருத்தி பணிகள் முன்னேடுத்துச் செல்லப்படுகின்ற போதிலும் இலங்கையின் வெவ்வேறு பிரதேசங்களில் முஸ்லிம் மக்களின் மனதை புண்படுத்தக் கூடிய விதத்தில் சிறு கும்பல் ஒன்றினால் மேற் கொள்ளப்பட்டு வரும் செயல்களை வன்மையாக கண்டிப்பதுடன் அதற்காக மன வேதனையும் அடைகின்றேன்.
இன்று சகல இன மக்களும் சகோதரத்துவத்துடன் வாழ்வதனையே எல்லோரும் விரும்புகின்றார்கள். ஒரு இனத்தின் உதவியின்றி இன்னுமொரு இனம் தனித்து வாழமுடியாது. அவ்வாறான சமாதானத்தை விரும்பாத ஒரு கும்பல் இந்த சமாதானத்தையும் நிம்மதியான சூழ்நிலையினையும் விரும்பாமல் இதனை சீர்குலைத்து அதில் குளிர்காய முட்படுகின்றனர். இதனை அரசாங்கம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் தவறினால் பாரிய விபரீதங்களை சந்திக்கநேரிடும் தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை அதிகளவிலான சிங்கள மக்கள் விரும்பவில்லை.
எமக்குள் பல பிரச்சினைகள் இருக்கலாம் அல்லது தனிப்பட்ட நபருடன் பிரச்சினை இருக்கலாம் அதற்காக ஒரு இனத்தின் மீது அல்லது ஒரு சமூகத்தின் மீது அதனை திணிப்பது அல்லது அவர்களின் அன்றாட செயற்பாடுகளுக்கெதிராக தடைகளை விதிப்பதென்பது மனிதாபிமானமற்ற ஒரு செயலாகும். இதனை இந்த நாட்டில் பிறந்த எந்த ஒரு குடிமகனும் அனுமதிக்கக் கூடாது. இலங்கை நாட்டில் பிறந்த சகலரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளே. நாம் எல்லோரும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழ்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்வோமாக என்று தெரிவித்தார்.
(எஸ்.அஷ்ரப்கான்)