எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, March 31, 2013

முஸ்லிம்கள் அரசுக்கு எதிராக போராட வேண்டும்: மட்டக்களப்பில் ரணில்

Print Friendly and PDF


சில கிளர்ச்சி குழுக்களைக் கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதற்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராட்டங்களை நடத்த முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கடந்த சனிக்கிழமை விஜயம் செய்த ரணில் விக்கிரமசிங்க ஏறாவூரில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் தொகுதிகளுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் ஏ.சி.ஹியாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டம், பொதுமக்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார். இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்; கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் வாழுகின்ற தமிழர்களை இந்த அரசாங்கம் நசுக்கியது. தற்போது சில கிளர்ச்சிக் குழுக்களை வைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகத்தை நசுக்கத் தொடங்கியுள்ளது. தம்புள்ள, அனுராதபுரம், குருநாகல் போன்ற பகுதிகளில் முஸ்லிம்களுக்கு என்ன துன்பங்கள் நடந்தது என்று உங்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும்.

ஆனால், இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எத்தனை அநியாயங்களை செய்து வருகின்ற போதிலும் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டு திரியும் அரசியல்வாதிகள் இதுவரை வாய் திறக்கவில்லை. இப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில்தான் இருக்கின்றது. ஏன் இவர்களால் வாய்திறந்து பேசமுடியாமல் உள்ளனர்.


ஆனால், பொதுபல சேனா அமைப்பினர் முஸ்லிம்களுக்கு எதிராக கோஷங்களை முன்வைத்த வேளையில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையும் எமது கட்சியில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுடன் பேச்சு நடத்தினோம். 

இன்று பெப்பிலியானவில் நடைபெற்ற சம்பவத்திற்கு எதிராக அரசாங்கம் எந்தவித அறிக்கையும் விடவில்லை. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, இவ்வாறான இன ரீதியான செயற்பாடுகளைக் கண்டிக்கவுள்ள அதேவேளை செயற்பாடுகளை உடன் நிறுத்தவேண்டும் எனவும் கேட்கவுள்ளது.

இங்குள்ள முஸ்லிம் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்து தேர்தலில் வெற்றிபெறச் செய்துள்ள போதிலும் அரசாங்க கட்சியில் உள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட அனைவரும் மௌனியாக காணப்படுவதை எண்ணி இன்று ஐக்கிய தேசியக் கட்சி கவலை வெளியிடுகின்றது.

கடந்த காலங்களில் இந்த நாட்டில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 2009ஆம் ஆண்டு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லினக்க ஆணைக்குழுவின் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்த விடயங்கள் எதனையும் அரசாங்கம் அமுல்படுத்தவில்லை.

ஆனால் இப்போது முஸ்லிம்களைக் குறிவைத்து அதன் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இன்று இந்த நாட்டில் உள்ள மக்கள் வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் மிகவும் கஷ்டத்தினை எதிர்நோக்குகின்றனர்.அதேவேளை சீரான சுகாதார வசதி இன்மை, இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பின்மை இதனால் கஷ்டப்படும் மக்கள் வெளிநாடு சென்று கஷ்டப்படுகின்றனர்.

எனவே, 2014ஆம் ஆண்டில் ஒரு தேர்தல் வருகின்ற போது அரசை மாற்றுகின்ற பணிகளில் நாம் ஈடுபட வேண்டும். அதற்காக நாம் இந்த 2013ஆம் ஆண்டில் இருந்து அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவ்வேளையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களை ஒன்றிணைத்ததாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் இரண்டு நாடாளுமன்ற உறப்பினர்களை நியமிக்க நாம் திட்டமிட்டுள்ளோம்.

அதன் நிமிர்த்தம் முஸ்லிம்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் தலைசாய்க்க வேண்டிய தேவையிருக்கின்றது. தேர்தல் வந்த பின்னர் அரசாங்கத்திற்கு வாக்களித்து விட்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை நீங்கள் ஐக்கி தேசிய கட்சியிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

இன்று முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளை ஐக்கி தேசிய கட்சி கண்டிக்கும் அதேவேளை முஸ்லிம்கள் நாங்கள் இலங்கையர்கள் எனும் கோஷத்தினை முன்வைத்து அரசுக்கு எதிராக முஸ்லிம்கள் போராட வேண்டும். அதற்காக ஐக்கிய தேசிய கட்சி மே மாதம் 01ஆம் திகதி 03 கட்டங்களாக இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளது.

அதற்கேற்ற வகையில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றினைந்து குழு ஒன்றினை உருவாக்கி அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க ஆயத்தமாகுங்கள். ஐக்கி தேசிய கட்சி முழு ஆதரவுகளையும் வழங்க தயாராகவுள்ளது. இவ்வாறு அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து நாட்டில் ராஜபக்ஷ ஆட்சியை மாற்ற வேண்டும் என்றார்.

(லோகதக்சன்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2