Published On: Thursday, March 28, 2013
'பெஷன் பக்' ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியத்துக்கு குண்டர்கள் தாக்குதல்
பொரலஸ்கமுவ, பெபிலியானவில் அமைந்துள்ள 'பெஷன் பக்' ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது இன்றிரவு 8 மணியளவில் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்களை வீசியும் வேறு ஆயுதங்களாலும் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இத்தாக்குதல் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 100 பேர் கொண்ட குண்டர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகவும் இதன் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தின் கட்டிடத்திற்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் தற்போது நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இதன் போது அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(விடிவெள்ளி)