எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, March 30, 2013

உயிருக்கு உலை வைத்தாலும் சமூகத்துக்காக குரல் கொடுப்பேன்: அžஸாத் சாலி

Print Friendly and PDF


தேசிய ஐக்கிய முன்னணியின் (நுஆ) பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான ஆஸாத் சாலி வழங்கிய செவ்வி

(நேர்காணல்: சிராஜ் எம். சாஜஹான்)

நாட்டில் அண்மைக்காலமாக இனவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் போது சவால்கள் பலவற்றுக்கு மத்தியிலும் பல்வேறு நடவடிக்கைகளை ஆஸாத்சாலி முன்னெடுத்து வருகின்றார். அஷ்ரப் உருவாக்கி கட்டி வளர்த்த நுஆ கட்சியையும் மிக அண்மையில் தம் வசப்படுத்தி விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இச்செயற்பாடுகள் தொடர்பாக தனது பேட்டியில் அவர் விபரிக்கிறார்.

கேள்வி: தேசிய ஐக்கிய முன்னணி கட்சியை (நுஆ) பொறுப்பேற்றுள்ளீர்களா?

பதில்: ஆம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் நுஆ கட்சியை ஆரம்பித்த போது முதலில் ஆதரித்தவன் நான். இன ரீதியான கட்சிகள் ஆரம்பிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நுஆ கட்சி நாட்டின் சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சேவையாற்றும் வகையில் உருவாக்கப்பட்டதால் அக்கட்சி செயற்பாடுகள் தொடர்பில் நான் அக்கறை காட்டினேன். தலைவர் அஷ்ரபிடமும் இது பற்றி நான் பிரஸ்தாபித்தேன்.

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட மாபெரும் தலைவர். சமூகத்தின் உரிமைகளை அவர் போராடிப் பெற்றார். முஸ்லிம்களுக்கான உரிமைகள் குறித்து அவர் காட்டிய ஆர்வம் இன்று எந்தத் தலைவரிடத்திலும் கிடையாது. முஸ்லிம் சமூகத்தை அவர் அடகு வைக்கவில்லை. உரிமைகள் போராடி கிடைக்காத சந்தர்ப்பங்களில் அவர் மக்கா சென்று தங்கியிருந்த காலங்களும் உண்டு. பின் அரசாங்கமே அவரது கோரிக்கைகளை ஏற்று முஸ்லிம் சமூகத்துக்கான உரிமைகளை வழங்கிய வரலாறும் உண்டு.

அவர் எந்தளவு தூரம் முன்னேறிச் சென்றாரென்றால் தனது சாணக்கியத்தின் மூலம் இந்த நாட்டின் பிரதி ஜனாதிபதி என்ற பதவியொன்றினைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தையும் பெற்றிருந்தார். அவ்வாறானதொரு பதவியை சிறுபான்மையினருக்கு வழங்குவதற்கான நோக்கமும் அப்போதைய அரசுக்கு இருந்தது. அப்பதவி அஷ்ரபுக்கு வழங்கப்படும் என்ற செய்தியும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது.

கேள்வி: அஷ்ரபுடைய முன்மாதிரிகளைப் பின்பற்றுவீர்களா?

பதில்: ஆம். அவர் எப்போதும் மக்களுக்காகவே குரல் கொடுத்தார். சமூக விடுதலையே அவரது தாரக மந்திரமாக இருந்தது. அவரது உயிரும் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதே பறிக்கப்பட்டது. அஷ்ரபுடைய முன்மாதிரிகளை பின்பற்றுவதில் எனக்கும் ஆர்வமுண்டு. தலைவர் அஷ்ரப் மரணித்ததன் பின் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் அவரது முன்மாதிரிகளை கைவிட்டனர். அவருடைய கைகள், கால்களை ஒவ்வொருவர் பிடுங்கிச் சென்று தனிக் கட்சிகளை ஆரம்பித்தனர். அவரது நோக்குகள், செயற்பாடுகளுக்கு முரணாகச் செயற்பட்டு முஸ்லிம் சமூகம் பற்றிச் சிந்திக்காது அரசுக்கு வக்காளத்து வாங்குவதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளனர். அஷ்ரப் போன்றதொரு தலைவரின் அருகில் கூட இவர்களை வைக்க முடியாது.

கேள்வி: தமிழ், முஸ்லிம் முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தீர்களே?

பதில்: ஆம். தமிழ், முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்து உரிமைகளுக்காக போராட வேண்டுமென்ற நோக்கில் அவ்வாறானதொரு கட்சியை ஆரம்பித்தது உண்மைதான். எனினும் அதிகமானோர் தேசிய மட்டத்தில் சகலரையும் இணைத்துக் கொண்டு செல்லக்கூடிய கட்சியொன்றினை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதுதான் எனது விருப்பமாகவும் இருந்தது. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை ஒன்று சேர்த்து சகலரினது உரிமைகளையும் வென்றெடுக்கும் ஒரு கட்சியாக நுஆவினை நான் தேர்ந்தெடுத்தேன்.

கேள்வி: இக்கட்சியை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப் போகின்றீர்கள்?

பதில்: நான் மேற்கொணடு வரும் இனவாதிகளுக்கான செயற்பாடுகள் குறித்தும் நுஆ கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் ஆயிரக்கணக்கானோர் என்னிடம் தொலைபேசி, ஈமெயில், நேரடியாகவும் தொடர்புகொண்டு கேட்டு வருகின்றனர். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22ம் திகதி முதல் கட்சிக்கு ஆட்சேர்ப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும். கிழக்கு மாகாணத்திலிருந்து பெருந்தொகையான மக்கள் என்னோடு அடிக்கடி தொடர்பு கொண்டு கட்சியில் சேர்வது குறித்து பேசுகின்றனர். 22ம் திகதி முதல் நுஆ கட்சியில் அவர்களை இணைத்துக்கொள்ள முடியும்.

கேள்வி: நுஆ கட்சியை நீங்கள் பதிவு செய்து விட்டீர்களா?

பதில்: தேர்தல் மறு சீரமைப்பு செய்வதால் புதிய கட்சிகளை பதிவு செய்ய முடியாது. புதிய கட்சிகளை ஆரம்பிக்கவும் நுஆ கட்சி செயலற்றிருந்ததால் புத் முன்னணியொன்றினை ஆரம்பிப்பதற்கு நாங்கள் திட்டமிட்டிருந்தோம். அதனடிப்படையில் நானும் விக்ரமபாகுவும் மனோ கணேசனும் ஒன்றிணைந்து நுஆ கட்சியைப் பொறுப்பேற்றோம். அதுபற்றி தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்தோம். அவரும் அதனை ஏற்றுக் கொண்டதாக கடிதம் அனுப்பியிருக்கிறார். தேர்தலொன்று நெருங்குகையில் நுஆ கட்சியின் பதிவினை அவர் ஏற்றுக் கொள்வார் என நம்புகின்றேன்.

கேள்வி: நீங்கள் அண்மையில் கூட்டிய மகாநாடு தோல்வியில் முடிந்ததாமே?

பதில்: இல்லை. வெற்றியில் தான் நிறைவு பெற்றது. நான் ஆயிரம் பேரை அழைத்தேன். ஒருசிலரைத் தவிர மற்ற அனைவரும் சமுகமளித்திருந்தனர். எதிர்க்கட்சியில் பலர் சமுகமளித்திருந்தனர். சந்திரிகா குமாரதுங்க வருகை தராவிட்டாலும் எனது செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து சிறப்புக் கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார். ஜனாதிபதி பயமுறுத்தியதால் அமைச்சர்கள் கூட்டத்துக்கு வரவில்லை. என்றாலும் கூட்டம் மிக வெற்றிகரமாக இடம்பெற்றது. தமர அமில தேரர் ஆற்றிய உரை இனவாதிகளுக்கு பயங்கர அடியாக அமைந்திருந்தது முக்கிய விடயமாகும்.

கேள்வி: நுஆ கட்சி அடுத்து வரும் தேர்தல்களில் களமிறங்குமா?

பதில்: ஆம். முதலில் வடக்கில் தேர்தல் வருமென்று சொல்கின்றார்கள். அதிலும் போட்டியிட்டு அதற்கு முன்போ அல்லது பின்போ எந்தவொரு தேர்தல் வந்தாலும் நிச்சயமாக மகத்தான ஆதரவுடன் தேர்தல்களில் நாம் வெற்றியும் பெறுவோம்.

கேள்வி: அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி…?

பதில்: சொல்வதற்கு என்ன இருக்கிறது. மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசு குடும்பத்தையும் அடிவருடிகளையும் முன்னேற்றி நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதே இந்த அரசின் நோக்கமாகும். வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடும் அரசு இது. ஏனைய சமயங்களையும் இனங்களையும் புறம் தள்ளி விட்டு பௌத்தத்துக்கு மாத்திரம் அனைத்தையும் வழங்குவதற்கு இந்த அரசு முற்பட்டு வருகின்றது. இந்த அரசு தான் இனவாதத்தை பாலுõட்டி வளர்க்கிறது. ஜனாதிபதி முதல் பாதுகாப்பு செயலாளர் உட்பட அரச முக்கியஸ்தர்கள் பலர் இனவாதிகளை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். பொதுபலசேனா அமைப்பின் முன்னேற்றத்துக்கு பாதுகாப்புச் செயலாளர் உதவி வருகிறார். பொதுபலசேனாவே இவ்வாறு கூறுகின்றது.

கேள்வி: உதாரணத்துக்கு ஒன்று கூறுங்களேன்?

பதில்: மிக அண்மையில் திறந்து வைக்கப்பட்ட மத்தள விமான நிலைய திறப்பு விழா நிகழ்வில் அரசு பச்சை, பச்சையாகவே இனவாதமாக செயற்பட்டது. அங்கு பிரித் பாராயணம் மட்டுமே இடம்பெற்றது. பிற சமயங்களின் அனுஷ்டானங்களுக்கு இடமளிக்கப்படவில்லை. அத்தோடு பௌத்த தேரர்களுக்கு இடமளிக்கும் வகையில் விழா மேடையிலிருந்து ஏனைய சமயத் தலைவர்கள் பிறிதொரு இடத்துக்கு மாற்றப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது. இது கவலை தரக்கூடியதொரு நிகழ்வாகும். ஜனாதிபதியினதும் அரசினதும் இனவாத செயற்பாடுகள் எந்தளவு துõரம் சென்றுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறதல்லவா?

கேள்வி: நுஆ கட்சி முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாக அமையுமா?

பதில்: ஆம். கிழக்கு மாகாணத்திலிருந்து இதற்கான பதில் எமக்கு கிடைத்து வருகிறது. முஸ்லிம் பிரச்சினைகளின் போது குரல் கொடுக்காத மு.கா.வும் இனவாதிகளை ஊக்குவிக்கும் இந்த அரசும் வேண்டாம் என கிழக்கு மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். நுஆ கட்சி முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் என்ற நம்பிக்கையும் முஸ்லிம்களிடம் உள்ளது. எனவே, இக்கட்சிக்கு முஸ்லிம்களின் ஆதரவு பெருகும். தேர்தல்களின் போது மு.கா.வினை மக்கள் புறக்கணிப்பார்கள். நுஆவினை ஆதரிப்பார்கள். இதன் மூலம் தேர்தல்களில் மு.கா.வுக்கு போட்டியான கட்சியாக உருவெடுப்போம்.

கேள்வி: முஸ்லிம் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பீர்களா?

பதில்: குரல் கொடுத்துக் கொண்டுதானிருக்கின்றோம். தம்புள்ள பள்ளி உடைப்பு முதல் ஹலால், அபாயா உட்பட முக்கிய பிரச்சினைகள் தோன்றிய போதெல்லாம் முதலில் குரலெழுப்பியவன் நான். இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ. மூனுக்கு கடிதம் எழுதியவனும் நான்தான். உலக நாடுகளில் வாழும் புலம்பெயர் முஸ்லிம்கள் எனது செயற்பாடுகளை பாராட்டுகின்றனர். எனது செயற்பாடுகளை ஊக்குவிதது நாளாந்தம் செய்திகளை அனுப்பி வைத்தவண்ணமுள்ளனர். எதிர்காலத்தில் எமது வேலைத் திட்டங்களை பாரிய அளவில் முன்னெடுப்பதே எனது பிரதான நோக்கமாகும்.

கேள்வி: உங்கள் பாதுகாப்பு நிலை குறித்து அச்சமுள்ளதா?

பதில்: ஆம். இதற்கு நான் பயப்படவில்லை. அல்லாஹ் எனது உயிரை எந்த நேரம் எடுக்க நாடுகிறானோ அந்த நேரத்தில் நான் போய்விட வேண்டும். அதற்கு நான் தயாராக இருக்கின்றேன். இந்த நாட்டு மக்களுக்காகவே நான் குரல் கொடுக்கின்றேன். அவர்களுக்காகவே போராடுகின்றேன். அந்த நிலைமையில் நான் மௌத்தாவதை பெருமையாகக் கருதுகின்றேன். 1992ல் என்மீது சரமாரியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. நான் உயிரிழந்து விட்டதாகவே நினைத்தேன். எனினும் அல்லாஹ் என்மீது கருணை காட்டியுள்ளான். தற்போதைய இனவாத செயற்பாடுகளை போராடுவதற்காக எனக்கு வாழ்வு தந்திருக்கின்றான்.

கேள்வி: ஹலால் விவகாரம் தொடர்பாக…?

பதில்: இந்த நாட்டு ஜனாதிபதி ஹலாலுக்கு எதிரானவர். அவரது சகோதரர் கோதாபய இப்போது ஹலாலை ஒழிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். பொதுபலசேனா செய்ய வந்ததை பாதுகாப்புச் செயலாளர் செய்கிறார். பொதுபலசேனா செயலாளர் ஞானசாரவும் எமக்கு ஹலால் வேலை முடிந்து விட்டது. அந்த பணியை இப்போது பாதுகாப்புச் செயலாளர் செய்து வருகிறார் எனச் சொல்கிறார். பாதுகாப்புச் செயலாளர் தற்போது விசேட பொலிஸ் பிரிவொன்றினை உருவாக்கி சுப்பர் மார்க்கட்டுகளில் ஹலால் உற்பத்திப் பொருட்கள் இருப்பதா எனத் தேடிப் பார்க்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

கேள்வி: பான் கீ மூனுக்கு அனுப்பிய கடிதம் பற்றி…?

பதில்: இலங்கைச் சரித்திரத்தில் முஸ்லிம் பிரச்சினையை சர்வதேசமயப்படுத்துவதற்காக நான் முயற்சித்தேன். ஐ.நா. செயலாளருக்கு இது பற்றி கடிதம் அனுப்பினேன். இக் கடிதத்தில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை பேரவை கவனம் செலுத்தவுள்ளது. அமெரிக்க அரசாங்கமும் இது பற்றி கவனம் செலுத்தவுள்ளதாக அந்நாட்டு அரசியல் துறை பிரதிச் செயலாளர் எனக்கு அறிவித்திருக்கிறார். நான் அனுப்பிய அறிக்கையிலுள்ள விடயங்கள் குறித்து அமெரிக்க துõதரகம் விரிவான கண்ணோட்டத்தைச் செலுத்தியுள்ளது. எனது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் துõதரகம் என்னோடு தொடர்பு கொண்டுள்ளது.

கேள்வி: பௌத்த மக்களைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: பௌத்தர்கள் மிகவும் நல்லவர்கள். அன்பு, காருண்யம் மிக்கவர்கள். கலபொடஞானசார போன்ற இனவாதம் கக்கும் வெகு சிலரைத் தவிர இந்த நாட்டிலுள்ள 99 வீத பௌத்த மக்கள் சிறந்த முறையில் எம்மோடு பழகுகின்றனர். ஞானசார தேரர் நிகழ்ச்சி நிரலொன்றின்படி செயற்படுகின்றார். ஒருசிலர் அவரது பேச்சில் மயங்குகின்றனர். அரசாங்கமும் இவருக்கு ஆதரவு வழங்குகின்றது.

கேள்வி: நிகாப் விவகாரத்தையும் கிளப்புகின்றார்களே?

பதில்: எமது முஸ்லிம் பெண்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களது உடைகளிலும் கை வைக்கின்றனர். எமது பெண்கள் அபாயா அணிந்து செல்வது அவருக்குப் பிடிக்கவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கைகளை நான் மேற்கொண்டு வருகின்றேன். முஸ்லிம் பெண்கள் அமைப்புக்கள், புத்திஜீவிகள், முக்கிய துறைகளிலுள்ள பெண்களை அடுத்த வாரமளவில் ஒரு இடத்தில் ஒன்றுகூட்டி இது தொடர்பாக அவர்களது கருத்துக்களைப் பெறவுள்ளேன்.

இதற்கான நடவடிக்கைகளை இப்போதே ஆரம்பித்துள்ளேன். முஸ்லிம் பெண்கள் கறுப்பு அபாயா அணிவது ஒரு சிலரின் கண்களைக் குத்துகிறது. எமது பெண்கள் கலர் அபாயாக்களை அணிய வேண்டும். இது குறித்தும் பெண்களிடத்தில் தெளிவுபடுத்தவுள்ளேன்.

கேள்வி: இனவாத செயற்பாடுகள் பற்றி…?

பதில்: இனவாத செயற்பாடுகளுக்கு பின்னணியில் இந்த நாட்டு ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் உள்ளனர். அவ்வாறின்றேல் அவர்கள் அதனை மறுக்க வேண்டும். முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகையில் அரசு அதனை தடுத்து நிறுத்த வேண்டும். எனினும் அரசு அவ்வாறு செய்யவில்லை. அதற்கு மாறாக அச்செயற்பாடுகளை ஊக்குவித்து வருகிறது. ஹலால் விடயத்தில் ஜம்மியத்துல் உலமாவையும் பாதுகாப்புச் செயலாளர்தான் பயமுறுத்துகிறார். ஹலால் விடயத்தை உலமா சபை முற்றாக நிறுத்த வேண்டும். ஐ.தே.க.வும் ஒரு சில கட்சிகளும் இதனை வலியுறுத்தி வருகின்றன.

கேள்வி: பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் பற்றி…?

பதில்: அவர் பற்றி சொல்வதற்கு அதிகம் இருக்கிறது. இவர் ஒரு பலே கில்லாடி. ஞானசார தேரருக்கும் நோர்வே தொழில்கட்சித் தலைவர் ஆர்னி பிய்ரோபிக்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளது. எல்.ரீ.ரீ.ஈ.க்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் கலபொட ஞானசார தேரர் உரத்துக் குரல் கொடுத்தார். நோர்வே தூதுவர் இவரை நோர்வேக்கு அழைத்துச் சென்று இவரது நிலைமைகளை மாற்றியமைத்து தமிழ் மக்களுக்கெதிராக செயற்பட வேண்டாமென வேண்டுகோள் விடுத்தார். அமைச்சர் ராஜிதவிடம் நோர்வே தூதுவர் ஞானசார தேரரை ஒப்படைத்தார். இவரை முழுமையாகப் பயன்படுத்தும்படியும் ராஜிதவிடம் கூறப்பட்டது.

இதன் பிறகு தமிழ் மக்களுக்கெதிராக நான் பேச மாட்டேன் என்றதுடன் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் ஞானசார தேரர் குரல் கொடுக்க ஆரம்பித்தார். யுத்தத்தில் நோர்வே தோற்றுவிட்டது. நோர்வே அரசுக்கு இலங்கை அரசு மேல் ஒரு கண். இலங்கை அரசுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்பதில் நோர்வே உறுதியாகவிருந்தது. அதற்குக் கிடைத்த சிறந்த ஆயுதம் தான் ஞானசார தேரர். ஞானசாரவுக்கு நிதி நோர்வேயால் வழங்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும்படி அவர் பணிக்கப்பட்டார்.

கடந்த ஜெனீவா பிரேரணையின்போது இலங்கை முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கில் எமது நாட்டுக்கு ஆதரவாக ஒன்று திரண்டார்கள். கோஷமெழுப்பினார்கள். முஸ்லிம் நாடுகள் (12) எமது அரசுக்கு ஆதரவு வழங்கின. இந்த ஆதரவுப் போக்கினை முஸ்லிம்கள் கைவிட வேண்டுமென்பதற்காகவே நோர்வே செயற்படுகின்றது. ஞானசார தேரரை அதற்குப் பயன்படுத்துகிறது. முடிந்தால் அவர் இதனை மறுக்கட்டும்.

கேள்வி: சர்வதேச ஆதரவு பற்றி…?

பதில்: ஒவ்வொரு தினமும் நூற்றுக்கணக்கானோர் என்னோடு தொடர்பு கொண்டிருக்கின்றார்கள். மேற்கத்திய நாடுகளில் வாழும் புலம்பெயர் முஸ்லிம் அமைப்புக்கள் நிலைமை பற்றி அடிக்கடி தொடர்பு கொள்கின்றனர். என்ன செய்ய வேண்டுமென்றே கேட்கின்றனர். மத்திய கிழக்கில் வாழும் எனது உடன் பிறப்புக்கள் ஒவ்வொரு நாளும் என்னோடு பேசுகின்றனர். நாங்கள் எதற்கும் ரெடி என அவர்கள் கூறுகின்றனர்.

இலங்கை முஸ்லிம் விவகாரம் சர்வதேசமயப் படுத்தப்பட்டுவிட்டது. அது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். முஸ்லிம்களுக்கு இந்தளவு அநியாயம் நடக்கும்போது பாகிஸ்தானும் இந்தோனேசியாவும் இங்கு ஒன்றும் நடக்கவில்லை என்கின்றனர். பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவர் முன்னாள் கிரிக்கட் வீரர் இம்ரான் கானுடன் தொடர்பு கொண்டு நிலைமை பற்றி கலந்துரையாடினேன். பாகிஸ்தான் மக்களுக்கு இலங்கை முஸ்லிம் பிரச்சினைகள் தமது கட்சி மூலம் விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் என்னிடம் உறுதியளித்தார்.

(நன்றி: நவமணி)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2